காவிரி டெல்டா மாவட்டங்களில் தூர்வாருதல், குடிமராமத்து பணி : 7 சிறப்பு கண்காணிப்பு அதிகாரிகள் நியமனம் 

காவிரி டெல்டா மாவட்டங்களில் தூர்வாருதல், குடிமராமத்து பணி : 7 சிறப்பு கண்காணிப்பு அதிகாரிகள் நியமனம் 
Updated on
1 min read

காவிரி டெல்டா மாவட்டங்களில் வறட்சி நிவாரணப்பணி, தூர்வாரும் பணி, குடி மராமத்துப் பனிகளை கவனிக்க சிறப்பு கண்காணிப்பு அதிகாரிகளாக 7 ஐஏஎஸ் அதிகாரிகளை நியமித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

இதுகுறித்த தமிழக அரசின் தலைமைச் செயலர் சண்முகம் பிறப்பித்த உத்தரவு வருமாறு:

காவிரி டெல்டா மாவட்டங்களான அரியலூர், கரூர், நாகை, புதுக்கோட்டை, தஞ்சை, திருச்சி மாவட்டங்களில் தூர் வாரும் பணிகளை மேற்கொள்ளவும், குடி மராமத்து பணிகளுக்காகவும் 392 பணிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

இதற்காக ரூ. 6724.75 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. மேற்கண்டப்பணிகளுக்கான காலகட்டம் 2020-21 ஆகும். மேற்கண்டபணிகளை ஆய்வு செய்து கண்காணித்து பணிகளை துரிதப்படுத்தி 10 நாட்களுக்குள் முடிக்க 7 ஐஏஎஸ் அதிகாரிகளை சிறப்பு கண்காணிப்பு அதிகாரிகளாக நியமித்து அரசு உத்தரவிட்டுள்ளது.

அதன்படி

* தஞ்சை மாவட்டத்துக்கு வேளாண்துறை முதன்மைச் செயலர் ககன்தீப் சிங் பேடி

* திருவாரூர் மாவட்டத்துக்கு வீட்டு வசதித்துறைச் முதன்மைச் செயலர் ராஜேஷ் லக்கானி.

* நாகப்பட்டினம் மாவட்டத்துக்கு பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை முதன்மைச் செயலர் சந்திரமோகன்.

* புதுக்கோட்டை மாவட்டத்துக்கு உயர் கல்வித்துறை முதன்மைச் செயலர் அபூர்வா.

* கரூர் மாவட்டத்துக்கு கால்நடைத்துறை முதன்மைச் செயலர் கோபால்.

* திருச்சி மாவட்டத்துக்கு நெடுஞ்சாலைத்துறை முதன்மைச் செயலர் கார்த்திக்.

* அரியலூர் மாவட்டத்துக்கு மாற்றுத்திறனாளிகள் நலத்துறை செயலர் விஜயராஜ் குமார்.

ஆகியோர் சிறப்பு கண்காணிப்பு அதிகாரிகளாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

ஒதுக்கப்பட்ட ஐஏஎஸ் அதிகாரிகள் பணிக்காலம் வரை அங்கேயே முகாமிட்டிருப்பார்கள். அனைத்து சிறப்பு கள அதிகாரிகளும் தலைமைச் செயலருக்கு பணி குறித்த அறிக்கையை சமர்ப்பிப்பார்கள். அவர்களை ஒருங்கிணைக்கும் பணியில் பொதுப்பணித்துறை முதன்மை செயலர் ஈடுபடுவார்.

அரசாணை வெளியிடப்பட்ட உடன் அனைத்து சிறப்பு கண்காணிப்பு அதிகாரிகளும் பணிகளை தொடங்கிவிடுவார்கள். இதற்கான அனைத்து வாகனம், அலுவலக ஊழியர்களை தங்கள் அலுவலகத்திலிருக்கும் வசதிகளை பயன்படுத்திக்கொள்வார்கள்”.

இவ்வாறு தலைமைச் செயலர் சண்முகம் பிறப்பித்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in