

தமிழகத்தில் கரோனா நோயாளிகளுக்கு ஹோமியோபதி மருந்து வழங்கக்கோரிய மனு மீதான விசாரணை சென்னை உயர் நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டது.
இது தொடர்பாக ஹோமியோபதி மருத்துவ நல சங்கத்தின் செயலாளர் பக்ரூதின், உயர் நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்துள்ள மனு:
மத்திய ஆயூஷ் அமைச்சகத்தின் ஒப்புதல் படி கொரோனா வைரஸ் தொற்று பரவாமல் தடுப்பதற்கும், கரோனோவால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கும் ஹோமியோபதி மருந்தான 'ஆர்ஷனிக் ஆல்பம் 3 சி’ மருந்தை கொடுக்கலாம் என பரிந்துரைத்துள்ளது.
மணிப்பூர் மாநிலத்தில் ஹோமியோபதி மருந்து வழங்கப்படுகிறது.
தெலுங்கானா உயர்நீதிமன்றம் உத்தரவிட்டதால், தெலுங்கானாவில் உயர்நீதிமன்ற நீதிபதிகள் மற்றும் பணியாளர்களுக்கும் ஹோமியோபதி மருந்து வழங்கப்படுகிறது.
அதன்படி தமிழகத்திலும் அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெறும் ஹோமியோபதி நோயாளிகளுக்கு ஆங்கில மருந்துகளுடன் ‘ஆர்ஷனிக் ஆல்பம் 3 சி’ என்ற ஹோமியோபதி மருந்தும் வழங்க உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.
இந்த மனுவை நீதிபதி சி.வி.கார்த்திக்கேயன் வீடியோ கான்பரன்சில் இன்று விசாரித்தார். அரசு தரப்பில் இதுபோன்ற கோரிக்கையுடன் தாக்கல் செய்யப்பட்ட மனு சென்னை உயர் நீதிமன்றத்தில் நிலுவையில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து இந்த மனு மீதான விசாரணையை சென்னை உயர் நீதிமன்றத்துக்கு மாற்றி நீதிபதி உத்தரவிட்டார்.