

புதுச்சேரியை ஒட்டியுள்ள விழுப்புரம் பகுதி சித்தலம்பட்டில் சிலர் மது அருந்திக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு சென்ற புதுச்சேரி ஐஆர்பிஎன் காவலர்கள் மணிகண்டன், கோகுல், பிரசன்னா, போக்குவரத்து காவலர் செல்வம் ஆகியோர், அவர்களிடம் இருந்த மதுபாட்டில்களை பறிமுதல் செய்துள்ளனர். ஆனால், அவற்றை கலால் துறையில் ஒப்படைக்கவில்லை. புகாரின்பேரில், புதுச்சேரி காவல் தலைமையகம் நடத்திய விசாரணையில் மதுபாட்டில்களை தங்களது சொந்த தேவைக்கு எடுத்து சென்றது தெரியவந்தது. இதையடுத்து, 4 காவலர்களையும் சஸ்பெண்ட் செய்து முதுநிலை காவல் கண்காணிப்பாளர் ராகுல் அல்வால் உத்தரவிட்டார்.
மேலும், 4 காவலர்கள் மீதும் திருக்கனூர் போலீஸார் 7 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர். 4 பேரில் செல்வம், கோகுல், மணிகண்டன் ஆகியோர் சரண் அடைந்துள்ளனர். தலைமறைவாக இருக்கும் பிரசன்னாவை போலீஸார் தேடி வருகின்றனர்.