கோவிட்டால் ஏற்படும் நெஞ்சக தொற்று நோய் அறியும் நவீன எக்ஸ்ரே கொண்ட 14 வாகனங்கள்: முதல்வர் பழனிசாமி தொடங்கி வைத்தார்

கோவிட்டால் ஏற்படும் நெஞ்சக தொற்று நோய் அறியும் நவீன எக்ஸ்ரே கொண்ட 14 வாகனங்கள்: முதல்வர் பழனிசாமி தொடங்கி வைத்தார்
Updated on
1 min read

நெஞ்சக தொற்று நோய் மற்றும் கோவிட்டால் ஏற்படும் நெஞ்சக தொற்று நோய்களைத் துரிதமாகக் கண்டறிய நடமாடும் அதிநவீன எக்ஸ்ரே கருவி பொருத்தப்பட்ட 14 வாகனங்களை பொதுமக்கள் பயன்பாட்டுக்காக முதல்வர் பழனிசாமி தொடங்கிவைத்தார்.

முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று (11.5.2020) தலைமைச் செயலகத்தில், மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறையின் தேசிய நல வாழ்வு குழுமத்தின் சார்பில் 5 கோடியே 48 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில், நெஞ்சக தொற்று நோய் மற்றும் கோவிட்டால் ஏற்படும் நெஞ்சக தொற்று நோய்களைத் துரிதமாகக் கண்டறிய நடமாடும் அதிநவீன எக்ஸ்ரே கருவி பொருத்தப்பட்ட 14 வாகனங்களை பொதுமக்களின் பயன்பாட்டிற்காக தொடங்கி வைக்கும் அடையாளமாக 5 வாகனங்களை கொடியசைத்துத் தொடங்கி வைத்தார்.

இந்த நடமாடும் அதிநவீன எக்ஸ்ரே கருவி பொருத்தப்பட்ட வாகனங்களின் மூலம் நோயாளிகளின் இருப்பிடத்திற்கே சென்று எக்ஸ்ரே எடுப்பதுடன், அப்பரிசோதனை முடிவினை மருத்துவர்கள் துரிதமாகக் கண்டறிந்து சிகிச்சை அளித்திடவும் இயலும்.

இன்னும் பிற நெஞ்சக நோய்களான ஆஸ்துமா, நாள்பட்ட நுரையீரல் அடைப்பு நோய்கள் ((Chronic Obstructive Pulmonary Disease), தொழிற் சார்ந்த நுரையீரல் நோய்களான சிலிக்கோசிஸ், பாகோசிஸ் போன்றவற்றை ஆரம்பத்திலேயே கண்டறியவும் இவ்வாகனம் பயன்படுத்தப்படும்.

இந்த நிகழ்ச்சியில் அமைச்சர் விஜயபாஸ்கர், தலைமைச் செயலாளர் சண்முகம், குடும்ப நலத்துறை செயலாளர் பீலா ராஜேஷ், மாநில நலவாழ்வுக் குழும இயக்குநர் செந்தில்ராஜ் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in