அவுரங்காபாத் விபத்து: விசாரித்து சம்பந்தப்பட்டவர்களுக்கு தண்டனை வழங்க வேண்டும்; புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி

புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி: கோப்புப்படம்
புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி: கோப்புப்படம்
Updated on
2 min read

அவுரங்காபத்தில் நடந்த சம்பவம் தொடர்பாக ரயில்வே அமைச்சர் உடனடியாக விசாரணை வைத்து சம்பந்தப்பட்டவர்களுக்கு தண்டனை வழங்க வேண்டும் என்று புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி வலியுறுத்தியுள்ளார்.

இது குறித்து அவர் இன்று (மே 9) செய்தியாளர்களிடம் கூறியதாவது:

"புதுச்சேரியில் புதிதாக கோயம்பேடு மார்க்கெட்டில் பணிபுரிந்த குச்சிப்பாளையத்தைச் சேர்ந்த ஒருவரும், செல்லிப்பட்டைச் சேர்ந்த ஒருவரும் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களை தவிர மற்ற அனைவரும் குணமடைந்து வீட்டுக்குச் சென்றுள்ளனர். இப்போது காரைக்கால், மாஹே மற்றும் ஏனாம் பகுதிகள் பச்சை மண்டலமாக மாறியுள்ளன.

நேற்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சகத்தின் இணை செயலாளர் ஒரு அறிவிப்பு வெளியிட்டுள்ளார். அதில் இந்த கரோனா தொற்று நோயுடன் மக்கள் வாழ வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது சிந்திக்க வேண்டியதாக உள்ளது. இந்த கரோனா தொற்று நோய் நம் நாட்டைவிட்டு வெகுவிரைவில் போகாது என்று அதில் தெரிகிறது.

ஆகவே, கரோனா தொற்று நோயோடு இருந்து அதனை வெல்வதற்கு அனைத்து நடவடிக்கைகளையும் மக்கள் எடுக்க வேண்டும். மக்கள் தங்களுடைய வாழ்க்கை முறையை மாற்றிக் கொள்ள வேண்டிய காலகட்டம் இது. கரோனா தொற்று ஒழியும் வரை திருமணம், ஈமச்சடங்கு, திருவிழாவுக்கு செல்வதை மக்கள் தவிர்க்க வேண்டும்.

அவுரங்காபத்தில் நடந்த சம்பவம் நம்முடைய மனதை உலுக்கியுள்ளது. மிகப்பெரிய அளவில் ஏழை தொழிலாளர்களின் குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. இந்த சம்பவம் தொடர்பாக ரயில்வே அமைச்சர் உடனடியாக விசாரணை வைத்து சம்பந்தப்பட்டவர்களுக்கு தண்டனை அளிக்க வேண்டும்.

உயிரிழந்த தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு கணிசமான தொகையை நிவாரணமாக வழங்க வேண்டும். இதுபோன்ற சம்பவம் இனிமேல் நடக்கக் கூடாது. ஆகவே, ஏழைகளை எல்லாம் ஒரு மாநிலத்தில் இன்னொரு மாநிலத்துக்குச் செல்வதற்கு இரு மாநிலங்களும் ஒருங்கிணைந்து பாடுபட வேண்டும்.

நேற்று பிரதமருக்கு ஒரு கடிதம் எழுதியுள்ளேன். அதில், சிவப்பு மண்டலம், ஆரஞ்சு மண்டலம், பச்சை மண்டலம் என மத்திய அரசு நிர்ணயிக்கக் கூடாது. அதனை மாநில அரசுகள் நிர்ணயிக்க வேண்டும். 17 ஆம் தேதியுடன் ஊரடங்கு உத்தரவு முடிய போகிறது. தற்போது மாநிலத்தின் பொருளாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது.

மாநில அரசுக்கு வருவாய் இல்லை. கடந்த 45 நாட்களாக எல்லா மாநிலமும் மிகப்பெரிய அளவில் பொருளாதார நெருக்கடியில் இருக்கிறது. அரசு ஊழியர்களுக்கு ஊதியம் போட முடியவில்லை. மக்கள் நலத்திட்டங்களை நிறைவேற்ற முடியவில்லை. இதுபோன்ற பல பிரச்சினைகள் உள்ளன. அதற்கு மத்திய அரசின் திட்டம் என்ன? மத்திய அரசு இந்த நேரத்தில் மாநில அரசுகளுக்கு கணிசமான நிதியை கொடுத்து, மாநில அரசுகள் பொருளாதாரத்தில் மேம்பட உதவ வேண்டும்.

மத்திய அரசு பிறப்பித்த ஊரடங்கு உத்தரவுபடி நாம் நடந்து கொண்டோம். அதற்காக கடைகள், தொழிற்சாலைகளை மூடினோம். அதேபோல், மாநிலங்களுக்கு உதவ வேண்டிய கடமை, பொறுப்பு மத்திய அரசுக்கு உண்டு. மத்திய அரசிடம் நிதி உள்ளது. மாநில அரசிடம் நிதி இல்லை. அது காங்கிரஸ் ஆளும் மாநிலமாக இருந்தாலும் சரி, பாஜக ஆளும் மாநிலமாக இருந்தாலும் சரி மத்திய அரசு தான் உதவ வேண்டும்.

நாங்கள் வெளிப்படையாக பேசுகிறோம். ஆனால், பாஜக முதல்வர்கள் வாய்த்திறந்து பேச முடியாத சூழலில் உள்ளனர். அதுமட்டுமல்ல, பிரதமர் ஒரு நிபுணர் குழுவை அமைத்து, குறுகிய காலத்தில் எந்தெந்த திட்டங்களை மாநில அரசுகள் நிறைவேற்றினால் பொருளாதாரத்தை மேம்படுத்த முடியும், அதற்கு மாநில அரசுகளுக்கு மத்திய அரசு எந்தெந்த நிதி ஆதாரத்தைக் கொடுக்க வேண்டும் என்பதை நிபுணர் குழு பரிந்துரை செய்ய வேண்டும். அதற்கு பிரதமர் உத்தரவிட வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளேன்

மேலும், புதுச்சேரிக்கு சேர வேண்டிய நிதியை கொடுக்க வேண்டும், நிதிக்குழுவில் சேர்க்க வேண்டும், கடன் வாங்கும் சக்தியை உயர்த்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை முன் வைத்துக் கடிதம் எழுதியுள்ளேன். இதற்கு பிரதமர் செவிசாய்ப்பார் என்று நினைக்கிறேன்"

இவ்வாறு நாராயணசாமி தெரிவித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in