சென்னை மெரினா கடலில் குதித்து மருத்துவர் தற்கொலை 

சென்னை மெரினா கடலில் குதித்து மருத்துவர் தற்கொலை 
Updated on
1 min read

சென்னையில் தனியார் மருத்துவமனையில் பணியாற்றிய மருத்துவர் ஒருவர் மெரினா அருகே கடலில் குதித்து தற்கொலை செய்துகொண்டார். உடல் கரை ஒதுங்கிய நிலையில் போலீஸார் உடலைக் கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.

சென்னை விருகம்பாக்கம் ஷியாமளா கார்டன் பகுதியில் வசித்தவர் மல்லிகார்ஜுன் (34). இவர் போரூரில் உள்ள தனியார் மருத்துவக் கல்லூரியில் மருத்துவப்படிப்பை முடித்துவிட்டு பள்ளிக்கரணையில் உள்ள தனியார் மருத்துவமனையில் பணியாற்றி வந்தார்.

இந்நிலையில் நேற்று மதியம் வழக்கம் போல் பணிக்குச் செல்வதாக வீட்டில் தெரிவித்து தனது காரை எடுத்துக்கொண்டு கிளம்பிச் சென்றார். பின்னர் மாலை அவரது தம்பி அஜய் செல்போனுக்கு ஒரு மெசேஜை அனுப்பியுள்ளார். அதில், “என் சாவிற்கு யாரும் காரணம் இல்லை அம்மா, அப்பாவை நன்றாகக் கவனித்துக் கொள்ளவும். லைட் ஹவுஸ் அருகில் கார் உள்ளது” என்று செல்போனுக்குத் தகவல் அனுப்பி வைத்துள்ளார்.

இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த அவரது தம்பி அஜய் உடனடியாக கிளம்பி மெரினா கடற்கரைக்கு வந்துள்ளார். அங்கு அவர்களது கார் இருந்தது. கடலுக்கு அருகே சென்று தேடிப் பார்த்ததில் விவேகானந்தர் இல்லம் அருகே மல்லிகார்ஜுனின் உடல் கடல் அலையில் தள்ளப்பட்டு கரை ஒதுங்கிக் கிடந்தது.

உடனடியாக அவரது தம்பி அஜய் மெரினா காவல் நிலையத்துக்குத் தகவல் கொடுத்தார். அங்கு வந்த போலீஸார் மல்லிகார்ஜுனின் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மருத்துவரின் மரணம் குறித்து போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மரணத்திற்கான காரணம் இன்னும் தெரியவில்லை.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in