லாரி மோதி உயிரிழந்த போக்குவரத்து தலைமைக் காவலர் குடும்பத்துக்கு ரூ.50 லட்சம் இழப்பீடு; அரசு வேலை: முதல்வர் பழனிசாமி அறிவிப்பு

லாரி மோதி உயிரிழந்த போக்குவரத்து தலைமைக் காவலர் குடும்பத்துக்கு ரூ.50 லட்சம் இழப்பீடு; அரசு வேலை: முதல்வர் பழனிசாமி அறிவிப்பு
Updated on
1 min read

ஓசூரில் பணியிலிருந்த போக்குவரத்து தலைமைக் காவலர் லாரி மோதி உயிரிழந்த நிலையில் அவரது குடும்பத்துக்கு ரூ.50 லட்சம் இழப்பீடும், குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலையும் வழங்கப்படும் என்று முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் சிப்காட் காவல் நிலையத்தில் போக்குவரத்துப் பிரிவு தலைமைக் காவலராகப் பணியாற்றியவர் சேட்டு. இவர் நேற்று முன் தினம் இரவு ஓசூர் பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள ஜூஜூவாடி பார்டர் சோதனைச் சாவடியில் பணியில் இருந்தார்.

அதிகாலையில் சோதனைச்சாவடி அருகே சென்னையிலிருந்து அகமதாபாத்திற்குச் சென்று கொண்டிருந்த கண்டெய்னர் லாரி மீது, பின்னால் வந்த டிப்பர் லாரி தனது கட்டுப்பாட்டை இழந்து வேகமாக மோதியது.

இதில் கட்டுப்பாட்டை இழந்த கண்டெய்னர் லாரி அங்கிருந்த தடுப்பின் மீது மோதி விபத்தை ஏற்படுத்தியது. அப்போது தடுப்பின் மறுபுறம் நின்றுகொண்டிருந்த தலைமைக் காவலர் சேட்டு மீது கண்டெய்னர் லாரி மோதியது. இதில் சம்பவ இடத்திலேயே அவர் தலை நசுங்கி பலியானார்.

விபத்து குறித்து தகவல் அறிந்து வந்த சிப்காட் போலீஸார் சேட்டு உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக ஓசூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அவர் மீது மோதிய கண்டெய்னர் லாரியை ஓட்டி வந்த உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த டிரைவர் பில்ஷாத் (27) கைது செய்யப்பட்டார்.

இந்த விபத்து குறித்து அறிந்த முதல்வர் பழனிசாமி, தலைமைக் காவலர் சேட்டு மறைவுக்கு இரங்கல் தெரிவித்தார். அவரது குடும்பத்திற்கான இழப்பீட்டையும் அறிவித்தார்.

இதுகுறித்து முதல்வர் பழனிசாமி இன்று வெளியிட்ட அறிவிப்பு:

''கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிப்பட்டணத்தைச் சேர்ந்த சேட்டு என்பவர், ஓசூர் போக்குவரத்து காவல் நிலையத்தில் தலைமைக் காவலராகப் பணிபுரிந்து வந்தார். அவர் 7.5.2020 அன்று தமிழ்நாடு-கர்நாடகா எல்லையில் உள்ள ஜூஜூவாடியில், கரோனா வைரஸ் தொற்று தடுப்புக்காக அமைக்கப்பட்ட சோதனைச் சாவடியில் பணியில் ஈடுபட்டிருந்தார்.

அப்போது, சென்னையிலிருந்து அகமதாபாத்திற்குச் சென்று கொண்டிருந்த கண்டெய்னர் லாரி மீது, பின்னால் வந்த டிப்பர் லாரி தனது கட்டுப்பாட்டை இழந்து வேகமாக மோதியதால், கண்டெய்னர் லாரி அங்கிருந்த தடுப்பின் மீது மோதி விபத்தை ஏற்படுத்தியது. அப்போது தடுப்பின் மறுபுறம் இருந்த தலைமைக் காவலர் சேட்டு பலத்த காயமடைந்து, சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார் என்ற செய்தியை அறிந்து நான் மிகுந்த வேதனை அடைந்தேன்.

பணியின் போது உயிரிழந்த தலைமைக் காவலர் சேட்டுவை இழந்து வாடும் அன்னாரது குடும்பத்திற்கு எனது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

சேட்டுவின் குடும்பத்திற்குச் சிறப்பினமாக, முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து 50 லட்சம் ரூபாய் நிவாரணமாக வழங்க நான் உத்தரவிட்டுள்ளேன். மேலும், அன்னாரது குடும்பத்தில் ஒருவருக்குத் தகுதியின் அடிப்படையில் அரசுப் பணி வழங்கவும் நான் உத்தரவிட்டுள்ளேன்''.

இவ்வாறு முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in