பெட்ரோல் - டீசல் மீதான வாட் வரி உயர்வு; வெந்த புண்ணில் வேலைப் பாய்ச்சும் தமிழக அரசு; மார்க்சிஸ்ட் கண்டனம்

கே.பாலகிருஷ்ணன்: கோப்புப்படம்
கே.பாலகிருஷ்ணன்: கோப்புப்படம்
Updated on
1 min read

பெட்ரோல் - டீசல் மீதான வாட் வரி உயர்வை தமிழக அரசு திரும்பப் பெற வேண்டும் என, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக, கே.பாலகிருஷ்ணன் இன்று (மே 4) வெளியிட்ட அறிக்கையில், "சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை நாளுக்கு நாள் வெகுவாகச் சரிந்து வரும் நிலையில் நமது நாட்டில் பெட்ரோல்-டீசல் விலையும் கணிசமான அளவுக்குக் குறைய வேண்டும்.

ஆனால், அதற்குப் பதிலாக வெந்த புண்ணில் வேலைப் பாய்ச்சுவது போல் மத்திய அரசும், மாநில அரசும் போட்டி போட்டுக் கொண்டு பெட்ரோல்-டீசல் மீது வரி விதிப்பது கண்டனத்துக்குரியது.

கரோனா வைரஸ் பரவலைத் தடுக்க நாடு முழுவதும் 3-வது முறையாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில், 40 நாட்களுக்கும் மேலாக சாதாரண ஏழை - எளிய உழைப்பாளி மக்களும், நடுத்தர மக்களும் வேலையின்றி பொருளாதார ரீதியாக மிகவும் சிரமப்பட்டு வரும் சூழலில் தமிழக அரசு நேற்று இரவு முதல் பெட்ரோல் லிட்டர் ஒன்றுக்கு ரூ 3.25, டீசல் லிட்டர் ஒன்றுக்கு ரூ.2.50 வாட் வரி உயர்த்தியதை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வன்மையாகக் கண்டிக்கிறது. அதனை உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும்.

தமிழக அரசு தனது நிதித் தேவைக்கு உரிய வழிவகைகளை ஆய்வு செய்து கண்டறிவதோடு, ஏற்கெனவே திட்டப் பணிகளுக்கு ஒதுக்கீடு செய்து நிலுவையில் உள்ளதும், தொடர முடியாததுமான பணிகளுக்கான பணத்தை மடைமாற்றம் செய்ய வேண்டுமே தவிர, கரோனா ஊரடங்கு காரணமாக பொருளாதார ரீதியாக மிகவும் சிரமப்பட்டு வரும் மக்கள் மீது மேலும் இத்தகைய வரி விதிப்பினைக் கைவிட வேண்டும்.

மேலும், மாநில அரசுக்கு மத்திய அரசு தர வேண்டிய பல்வேறு நிதி பாக்கிகளையும், கரோனா வைரஸ் தடுப்புக்காக மத்திய அரசிடம் கோரிய நிதியையும் வலியுறுத்திக் கேட்டுப் பெற வேண்டும். மாறாக மத்திய அரசுக்கு அடிபணிந்து சென்று பெட்ரோல்-டீசல் மீது வாட் வரி விதித்திருப்பது என்பது சரியான தீர்வல்ல என்பதை தமிழக அரசுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் சுட்டிக்காட்ட விரும்புகிறோம்" எனத் தெரிவித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in