வரலாற்றில் முதல்முறை: பக்தர்கள் இன்றி நடந்த மதுரை மீனாட்சி அம்மன் திருக்கல்யாணம்

படங்கள்: எஸ்.கிருஷ்ணமூர்த்தி
படங்கள்: எஸ்.கிருஷ்ணமூர்த்தி
Updated on
2 min read

கரோனா ஊரடங்கு காரணமாக வரலாற்றிலேயே முதன்முறையாக மதுரை மீனாட்சியம்மன் - சொக்கநாதர் திருக்கல்யாணம் பக்தர்கள் இன்றி நடைபெற்றது.

ஏற்கெனவே, கரோனா தொற்று காரணமாக தமிழகம் முழுவதுமே கோயில்கள், மசூதிகள், தேவாலயங்கள் என வழிபாட்டுத் தலங்களில் பக்தர்களுக்கு அனுமதியில்லை. மே 17 வரை இந்த தடை அமலில் உள்ளது.

இந்நிலையில் மதுரையில் 10 நாட்கள் நடைபெறும் சித்திரைத் திருவிழா இந்த ஆண்டு ரத்து செய்யப்பட்டது. கரோனா வைரஸ் ஊரடங்கு காரணமாக மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயிலில் சித்திரை பெருவிழா கொடியேற்றம், தினமும் நடைபெறும் வைபவங் கள், சுவாமி வீதி உலாக்கள், பட்டாபிஷேகம், திக்கு விஜயம், தேரோட்டம் ஆகியவை ரத்து செய்யப்பட்டன.

இந்நிலையில், மீனாட்சி - சொக்கநாதர் திருக்கல்யாணம் மட்டும் பக்தர்கள் இன்றி சிவாச்சார்யர்களால் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது. அதன்படி இன்று (மே 4) காலை 9.05 முதல் 9.29 மணிக்குள் சுவாமி சன்னதி முதல் முதல் பிரகாரத்தில் அமைந்துள்ள உற்சவ மூர்த்திகள் எழுந்தருளும் சேத்தி மண்டபத்தில் (உற்சவர் சன்னதி) நான்கு சிவாச்சாரியார்கள் மட்டும் உரிய பாதுகாப்பு நெறி முறைகளைப் பின்பற்றி நடத்திவைத்தனர்.

முன்னதாக பக்தர்கள் ஆர்வ மிகுதியில் கோயிலை நோக்கி குவிந்துவிடக் கூடாது என்பதற்காக நான்கு கோபுர வாயில்களில் போலீஸார் தீவிர கண்காணிப்பில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர். மதுரை காவல் ஆணையர் தலைமையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டிருந்தன. கோயிலுக்குள் சிவாச்சார்யர்கள் செல்லும் முன் கிருமி நாசினியால் கைகளை சுத்தம் செய்து கொண்ட பின்னரே அனுமதிக்கப்பட்டனர்.
கோயிலுக்குள் முக்கியப் பணிகளுக்காக சென்ற ஊழியர்கள் அனைவருமே பாதுகாப்பு விதிமுறைகளைக் கடைபிடித்திருந்தனர்.
இந்து சமய அறநிலையத் துறையின் அதிகாரபூர்வ இணையதளமான www.tnhrce.gov.in, கோயிலின் இணையதளமான www.maduraimeenakshi.org ஆகியவற்றில் நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்டது.

இதுதவிர இந்து தமிழ் இணையதளத்திலும் திருக்கல்யாணம் நேரலையில் ஒளிபரப்பப்பட்டது. திருக்கல்யாண உற்சவத்தின் போது திருமாங்கல்ய மங்கல நாண் அணிந்துகொள்ள விரும்பும் தாய்மார்கள் காலை 9.05 முதல் 9.29 மணிக்குள் தங்கள் இல்லத்திலேயே பிரார்த்தித்து புதிய மங்கலநாண் மாற்றிக் கொள்ள உகந்த நேரம் என கோயில் நிர்வாகம் அறிவித்திருந்தது. அந்த நேரத்தில் மகளிர் பலரும் மங்கலநாணை வீட்டிலிருந்தபடியே மாற்றிக் கொண்டனர்.

அழகர் ஆற்றில் இறங்கும் நிகழ்ச்சியும் ரத்து:

கரோனா ஊரடங்கு காரணமாக மதுரை சித்திரைத் திருவிழாவின் முக்கிய நிகழ்வான வைகை ஆற்றில் கள்ளழகர் இறங்கும் வைபவம் ரத்து செய்யப்படுவதாக அழகர்கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.
இருப்பினும் மண்டூக மகரிஷிக்கு மோட்டம் வழக்கும் நிகழ்வு இணையம் வழியாக நேரலையாக ஒளிபரப்பப்படும் என அறிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in