கடலூர் எம்.பி. தனிமைப்படுத்தப்பட்டார்: பண்ருட்டி இல்லத்தில் நோட்டீஸ் ஒட்டப்பட்டது

கடலூர் எம்.பி. தனிமைப்படுத்தப்பட்டார்: பண்ருட்டி இல்லத்தில் நோட்டீஸ் ஒட்டப்பட்டது
Updated on
1 min read

கரோனா வைரஸ் தொற்று பாதித்தவரின் உறவினருடன் உரையாடிய கடலூர் எம்.பி. டி.ஆர்.வி.எஸ்.ரமேஷ் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டார்.

கரோனா வைரஸ் தொற்றுள்ள நபரின் உறவினர் என்று அறியாமல் அவருடன் அருகில் அமர்ந்து உரையாடியுள்ளார் கடலூர் மக்களவை உறுப்பினர் டி.ஆர்.வி.எஸ்.ரமேஷ்.

இதனால், பண்ருட்டியில் உள்ள அவரது வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டு, வீட்டில் சுகாதார துறையினர் நோட்டீஸ் ஒட்டினர்.

கடலூர் மக்களவை உறுப்பினர் டி.ஆர்.வி.எஸ்.ரமேஷ் பண்ருட்டியில் வசித்து வருகிறார்.பண்ருட்டியை அடுத்த தட்டாஞ்சாவடி கிராமத்தைச் சேர்ந்த பெண் ஒருவர், புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் தனது பேத்திக்கு புற்றுநோய் சிகிச்சை பெற ஏதுவாக மக்களவை உறுப்பினர் பரிந்துரை கடிதம் பெறுவதற்காக ரமேஷை நேற்று மாலை சந்தித்து கடிதம் பெற்றுச் சென்றுள்ளார்.

எம்.பி.யிடம் கடிதம் பெற்றுவிட்டு அந்தப் பெண் வீட்டிற்கு சென்றபோது, அவருடைய பேத்திக்கு கரோனா வைரஸ் தொற்று இருப்பதை மருத்துவர்கள் உறுதிப்படுத்தியுள்ளனர் சுகாதாரத்துறையினர். இதையடுத்து அந்தச் சிறுமி கரோனா சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டார்.

மேலும் சிறுமியுடன் தொடர்பில் இருந்தவர்களும் பரிசோதனைக்காக உட்படுத்தப்பட்டு, தனிமைப்படுத்தப்பட்டனர்.

அந்த வகையில் சிறுமியின் பாட்டி, கடலூர் மக்களவை உறுப்பினரை சந்தித்து உரையாடியதால், அவரும் வீட்டிலும் தனிமைப்படுத்தப்பட்டவர் என்று வீட்டின் முன்பு நகராட்சி அலுவலர்கள் நோட்டீஸ் ஒட்டியுள்ளனர்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in