உரிகம் வனச்சரகம் கெஸ்தூர் காப்புக்காட்டில் மான் வேட்டையாடி இறைச்சியுடன் பிடிபட்ட நபருடன் வனத்துறையினர்.
உரிகம் வனச்சரகம் கெஸ்தூர் காப்புக்காட்டில் மான் வேட்டையாடி இறைச்சியுடன் பிடிபட்ட நபருடன் வனத்துறையினர்.

மலைக் கிராமங்களில் தொடரும் மான் வேட்டை: 4 பேர் கைது- உரிகம் வனச்சரகத்தில் 3 சிறப்புக் குழுக்கள் அமைப்பு

Published on

ஓசூர், கெஸ்தூர் காப்புக் காட்டில் மான் வேட்டையில் ஈடுபட்டு அதன் இறைச்சியைக் கடத்திச் செல்ல முயன்ற 4 பேர் வனத்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

உரிகம் வனச்சரகத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு பிலிகல் காப்புக் காட்டில் வேட்டை நாயைப் பயன்படுத்தி மான் வேட்டையாடி இறைச்சியுடன் 3 பேர் கைது செய்யப்பட்டனர். இந்நிலையில் மீண்டும் இரண்டாவது முறையாக கெஸ்தூர் காப்புக் காட்டில் மான் வேட்டையில் ஈடுபட்ட 4 பேர் வனத்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

உரிகம் வனச்சரகத்தில் அடுத்தடுத்து மான் வேட்டை தொடரும் நிலையில் மாவட்ட வனத்துறை சார்பில் 3 சிறப்பு வேட்டைத் தடுப்புக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. ஓசூர் வனக்கோட்டத்தில் ஓசூர், கிருஷ்ணகிரி, சூளகிரி, தேன்கனிக்கோட்டை, உரிகம், ஜவளகிரி, அஞ்செட்டி உள்ளிட்ட 7 வனச்சரகங்கள் அமைந்துள்ளன.

இந்த வனச்சரகங்களில் உள்ள காப்புக்காடுகளில் அரியவகை பட்டியலில் இடம் பெற்றுள்ள வன உயிரினங்களான யானை, காட்டெருமை, சிறுத்தைப் புலி, கரடி, புள்ளிமான், முயல், மயில், காட்டுப்பன்றி மற்றும் மலைப்பாம்பு உள்ளிட்ட பல்வேறு வன உயிரினங்கள் வாழ்ந்து வருகின்றன. வனத்தை ஒட்டியுள்ள கிராம மக்கள் மற்றும் வனத்தின் வழியாகச் செல்லும் சுற்றுலாப் பயணிகள் வன உயிரினங்களை வேட்டையாடுவதைத் தடுக்கும் வகையில் மாவட்ட வனத்துறை சார்பில் வேட்டைத் தடுப்புக் குழுக்கள் அமைக்கப்பட்டு காப்புக் காடுகளில் ரோந்துப் பணி மேற்கொள்ளப்படுகிறது.

இந்நிலையில் உரிகம் வனச்சரகத்தில் உள்ள பிலிகல் காப்புக் காட்டைத் தொடர்ந்து கெஸ்தூர் காப்புக் காட்டிலும் அடுத்தடுத்து இரு மான் வேட்டைகள் நடந்துள்ளதால் உரிகம் வனச்சரகத்தில் 3 சிறப்பு வேட்டைத் தடுப்புக் குழுக்கள் அமைக்கப்பட்டு தீவிரக் கண்காணிப்புப் பணி தொடங்கியுள்ளது.

இதுகுறித்து உரிகம் வனச்சரகர் வெங்கடாசலம் கூறியதாவது:

''ஊரடங்கு காரணமாக நகரத்தில் இருந்து வனப்பகுதியை அடுத்துள்ள கிராமங்களுக்குத் திரும்பியுள்ள மக்களால் வேட்டை நாயைப் பயன்படுத்தி உரிகம் வனச்சரகத்தில் வனவிலங்கு வேட்டை நடத்தப்பட்டு வருகிறது. சில நாட்களுக்கு முன்பு வேட்டை நாயைப் பயன்படுத்தி மான் வேட்டையாடிய 3 பேர் கைது செய்யப்பட்டு ரூ.1 லட்சம் அபராதமாக வசூலிக்கப்பட்டது.

தற்போது அதேபோல இரண்டாவது முறையாக கெஸ்தூர் காப்புக்காட்டில் மானை வேட்டையாடி அதன் இறைச்சியைக் கடத்திச் செல்ல முயன்ற கெஸ்தூர் கிராமத்தைச் சேர்ந்த சிவனேகவுடுவின் இரு மகன்களான சிக்கசிவன்னா (40), சிவனங்கிரி (45) மற்றும் அதே கிராமத்தைச் சேர்ந்த முனியப்பா மகன் ருத்ரா (30), கரியகவுடா மகன் சந்தோஷா (23) ஆகிய 4 பேரும் கைது செய்யப்பட்டு அபராதமாக தலா ரூ.25 ஆயிரம் என மொத்தம் ரூ.1 லட்சம் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது.

தொடரும் வனவிலங்கு வேட்டையைத் தடுக்க ஒரு குழுவில் 10 பேர் கொண்ட 3 சிறப்பு வேட்டைத் தடுப்புக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த குழுவினர் உரிகம் வனச்சரகத்தில் உள்ள பிலிகல், உரிகம், கெஸ்தூர், தக்கட்டி, மல்லஹள்ளி, மஞ்சுகொண்டனப்பள்ளி உள்ளிட்ட 6 காப்புக் காடுகளில் தீவிரக் கண்காணிப்புப் பணியை மேற்கொண்டுள்ளனர். வனவிலங்குகள் வேட்டையில் ஈடுபடுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என வனத்தை ஒட்டியுள்ள கிராமங்கள்தோறும் தண்டோரா போடப்பட்டு எச்சரிக்கை செய்யப்பட்டு வருகிறது''.

இவ்வாறு வனச்சரகர் வெங்கடாசலம் கூறினார்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in