விபத்தில் சிக்கிய இளைஞருக்கு கரோனா தொற்று: அடையாறு போக்குவரத்துப் புலனாய்வுப் பிரிவு போலீஸாருக்கு சோதனை

விபத்தில் சிக்கிய இளைஞருக்கு கரோனா தொற்று: அடையாறு போக்குவரத்துப் புலனாய்வுப் பிரிவு போலீஸாருக்கு சோதனை
Updated on
1 min read

ஆழ்வார்பேட்டையில் விபத்தில் சிக்கிய இளைஞரை மீட்டு போக்குவரத்து போலீஸார் மருத்துவமனையில் அனுமதித்தனர். இந்நிலையில் அந்த இளைஞருக்கு கரோனா தொற்று உறுதியானதால் போக்குவரத்து அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்தனர். இதனால் போக்குவரத்து போலீஸாருக்கும் சோதனை நடத்தப்பட்டது.

சென்னை அடுத்த ஈஞ்சம்பாக்கத்தைச் சேர்ந்த 26 வயது இளைஞர் தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். கடந்த 28-ம் தேதி இருசக்கர வாகனத்தில் சென்றபோது ஆழ்வார்பேட்டை அருகே விபத்தில் சிக்கினார். இதில் இளைஞருக்கு வலது பக்கக் கணுக்காலில் எலும்பு முறிவு ஏற்பட்டது.

விபத்து குறித்து தகவல் அறிந்து வந்த அடையாறு சாஸ்திரி நகர் போக்குவரத்துப் புலனாய்வு போலீஸார் இருவர் இளைரை மீட்டு கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்குச் சிகிச்சை அளிக்கப்பட்டது. கரோனா சோதனையும் செய்யப்பட்டது. இந்நிலையில் அந்த இளைஞருக்கு கரோனா தொற்று இருப்பது சோதனையில் தெரியவந்துள்ளது.

இளைஞரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்த போக்குவரத்து போலீஸாருக்கும் கரோனா தொற்று ஏற்பட வாய்ப்புள்ளது என்பதால் அதிகாரிகள் அதிர்ச்சியடைந்தனர். விபத்து ஏற்பட்ட இடத்திற்குச் சென்ற அடையாறு சாஸ்திரி நகர் போக்குவரத்து புலனாய்வுத் துறை காவலர்கள் 2 பேருக்கும் கரோனா பரிசோதனை நடத்த உத்தரவிட்டனர்.

கொட்டிவாக்கத்தில் உள்ள மாநகராட்சி அலுவலகத்தில் இரு காவலர்களுக்கும் கரோனா பரிசோதனை செய்யப்பட்டது. அவர்கள் இருவரும் உடனடியாகத் தனிமைப்படுத்தப்பட்டனர். இதனைத் தொடர்ந்து அடையாறு போக்குவரத்து புலனாய்வுப் பிரிவு மூடப்படலாம் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், மாநகராட்சி ஊழியர்கள் வந்து காவல் நிலையம் முழுவதையும் கிருமிநாசினி தெளித்து சுத்தப்படுத்தினர்.

காவலர்களுக்கான சோதனை முடிவு வந்தபின் அதுகுறித்து முடிவெடுக்க உள்ளதாகக் கூறப்படுகிறது. இரு காவலர்களுடன் தொடர்பில் இருந்த மற்ற காவலர்கள் யார் எனக் கண்டறியும் விசாரணையும் நடைபெற உள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in