

மதுரையில் ‘கரோனா’ பாதிக்கப்பட்ட கர்ப்பிணி பெண்ணுக்கு பிறந்த குழந்தைக்கு நோய் தொற்று ஏற்படவில்லை. அந்தக் குழந்தையை ‘டீன்’ சங்குமணி மற்றும் மருத்துவக்குழுவினர், அந்தப் பெண்ணின் கனவரிடம் வழங்கினர்.
மதுரை அருகே சமயநல்லூரியில் அரசு ஆரம்ப சுகாதாரநிலையத்தில் கடந்த சில நாளுக்கு முன் கர்ப்பிணி பெண் ஒருவர் மகப்பேறு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அவருக்கு ‘கரோனா’ அறிகுறியிருந்ததால் அதிர்ச்சியடைந்த மருத்துவர்கள் அவரை மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
அங்கு அந்த பெண்ணிற்கு பரிசோதனை செய்ததில் ‘கரோனா’ இருந்தது தெரியவந்தது. அந்த பெண்ணிற்கு குழந்தை பிறந்தது. அதனால், குழந்தைக்கும் அந்த நோய் பரவியிருக்கக்கூடுமா என மருத்துவர்கள் அச்சமடைந்தனர்.
குழந்தைக்கு பரிசோதனை செய்ததில் நோய்த் தொற்று ஏற்படவில்லை என்பது தெரியவந்தது. மகிழ்ச்சியடைந்த மருத்துவக்குழுவினர் ‘டீன்’ சங்குமணி தலைமையில் குழந்தையை இன்று அந்த பெண்ணின் கணவரிடம் ஒப்படைத்தனர்.