உயர் நீதிமன்ற கிளைக்கு உட்பட்ட நீதிமன்றங்களின்  இடைக்கால உத்தரவுகள் ஜூன் 1 வரை நீட்டிப்பு

உயர் நீதிமன்ற கிளைக்கு உட்பட்ட நீதிமன்றங்களின்  இடைக்கால உத்தரவுகள் ஜூன் 1 வரை நீட்டிப்பு
Updated on
1 min read

உயர் நீதிமன்ற மதுரை கிளைக்கு உட்பட்ட அனைத்து நீதிமன்றங்கள் மற்றும் தீர்ப்பாயங்களின் இடைக்கால உத்தரவுகள் அனைத்தும் ஜூன் 1 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

ஊரடங்கு உத்தரவால் உயர் நீதிமன்ற மதுரை கிளையின் இடைக்கால உத்தரவுகள், மதுரை கிளைக்கு உட்பட்ட அனைத்து கீழமை நீதிமன்றங்கள், தீர்ப்பாயங்கள் பிறப்பித்த இடைக்கால உத்தரவுகள், நிபந்தனைகளுடன் வழங்கப்பட்ட ஜாமீன், முன்ஜாமீன், பரோல் உத்தரவுகள் ஏப். 30-ம் தேதி வரை நீட்டித்து உயர் நீதிமன்ற மதுரை கிளை மார்ச் 27-ல் உத்தரவிட்டது.

இந்த காலக்கெடு நேற்றுடன் முடிந்த நிலையில் இடைக்கால உத்தரவுகளை ஜூன் 1 வரை நீட்டித்து உயர் நீதிமன்ற மதுரை கிளை இன்று உத்தரவிட்டுள்ளது.

இது தொடர்பாக நீதிபதிகள் பி.என்.பிரகாஷ், டி.கிருஷ்ணவள்ளி அமர்வு பிறப்பித்த உத்தரவு:

கரோனா கட்டுப்பாட்டுக்குள் வந்துவிடும் என்ற எதிர்பார்ப்புடன் இடைக்கால உத்தரவுகள் ஏப். 30 வரை நீட்டிக்கப்பட்டது.

இருப்பினும் சில மாவட்டங்களில் கரோனா பரவல் அதிகமாக இருப்பதாக மருத்துவ அறிக்கை தெரிவிக்கிறது. இதன் காரணமாக மதுரை உட்பட 4 மாநகராட்சிகளில் 4 நாள் முழு ஊரடங்கும் கடைபிடிக்கப்பட்டது.

இந்த அசாதாரண சூழ்நிலையை கருத்தில் கொண்டு இடைக்கால உத்தரவுகள் அனைத்தும் ஜூன் 1 வரை நீட்டிக்கப்படுகிறது. சிறை கைதிகளின் காவல் நீட்டிப்பு உத்தரவுகள் கைதிகளின் ஜாமீன் உரிமையை பாதிக்காத வகையில் தொடரும்.

ஒருவேளை ஜூன் 1-க்கு முன்பு குற்றவியல் நீதிமன்றங்கள் செயல்படத் தொடங்கினால் காவல் நீட்டிப்பு உத்தரவுகளை வீடியோ கான்பரன்ஸ் அல்லது பிற அனுமதிக்கப்பட்ட வழிமுறைகள் அல்லது நீதித்துறை நடுவர் நேரில் சிறைக்கு சென்றும் பிறப்பிக்கலாம்.

இவ்வாறு நீதிபதிகள் உத்தரவில் கூறியுள்ளனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in