தூத்துக்குடி மாவட்டம் விரைவில் பச்சை மண்டலமாக மாறும்: அமைச்சர் கடம்பூர் ராஜூ நம்பிக்கை

தூத்துக்குடி மாவட்டம் விரைவில் பச்சை மண்டலமாக மாறும்: அமைச்சர் கடம்பூர் ராஜூ நம்பிக்கை
Updated on
1 min read

தூத்துக்குடி மாவட்டம் மத்திய அரசு சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள பட்டியலில் சிவப்பு மண்டலத்தில் இருந்தது. தற்போது ஆரஞ்சு மண்டலத்துக்கு மாறியுள்ளது. விரைவில் பச்சை மண்டலத்துக்கு மாறும் என அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்துள்ளார்.

முன்னதாக செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் செ.ராஜூ, தனது சொந்த செலவில், ஆட்டோ ஓட்டுநர்கள், சலவைத் தொழிலாளர்கள், முடி திருத்தம் செய்யும் தொழிலாளர்கள் மற்றும் தூய்மை பணியாளர்களுக்கு 187 பேருக்கு அரிசி மற்றும் மளிகை பொருட்களை வழங்கினார். நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி முன்னிலை வகித்தார்.

பின்னர் அமைச்சர் செய்தியாளர்களிடம் கூறும்போது, தூத்துக்குடி மாவட்டத்தில் கரோனா வைரஸ் தொற்றால் 27 பேர் பாதிக்கப்பட்டிருந்தனர். இதில், 70 வயதை கடந்த ஒரு பெண் உயிரிழந்தார். 25 பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

தற்போது தூத்துக்குடி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் ஒருவர் சிகிச்சை பெற்ற வருகிறார். அவரும் இன்னும் ஓரிரு தினங்களில் வீடு திரும்பும் நிலை உள்ளது.

தூத்துக்குடி மாவட்டம் மத்திய அரசு சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள பட்டியலில் சிவப்பு மண்டலத்தில் இருந்தது. தற்போது ஆரஞ்சு மண்டலத்துக்கு மாறியுள்ளது. விரைவில் பச்சை மண்டலத்துக்கு மாறும்.

வெளிமாவட்டங்களில் இருந்து வருபவர்களை கண்டறிந்து, அவர்களை தனிமைப்படுத்தி அவர்களது ரத்த மாதிரி எடுத்து பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது. இதுபோன்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொண்டு வருவதால் தான் இந்த அளவுக்கு கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. மாவட்டத்தில் ஒரு நாளைக்கு 200 பேர் வரை கண்டறியப்பட்டு பரிசோதனை செய்யப்படுகிறது. அதற்குரிய வசதியையும் தமிழக முதல்வர் தூத்துக்குடி மாவட்டத்துக்கு தந்துள்ளார்.

வெளி மாவட்டத்தில் இருந்து யார் வந்தாலும் உடனடியாக மாவட்ட நிர்வாகத்துக்கு தகவல் தெரிவிக்க வேண்டும். இதனை மக்கள் தங்களது கடமையாக நினைத்து செய்ய வேண்டும்.

தமிழக அரசு அமைத்துள்ள சுகாதாரக்குழு மாவட்டந்தோறும் உள்ள நிலைமைகளை கண்காணித்து வருகிறது. அவர்கள் அளிக்கும் அறிக்கையை பொறுத்து மாவட்டத்தில் ஊரடங்கு தளர்த்துவது குறித்து அரசு நடவடிக்கை எடுக்கும், என்றார் அவர்.

முன்னதாக காமநாயக்கன்பட்டியில் தீயணைப்பு துறையின் மூலம் கிருமிநாசினி தெளிக்கும் பணிகளையும், கயத்தாறு வட்டார வளர்ச்சி அலுவலகத்தின் மூலம் கிருமி நாசினி தெளிக்கும் பணிகளையும் அமைச்சர் பார்வையிட்டார். நிகழ்ச்சியில் கோட்டாட்சியர் விஜயா, வட்டார போக்குவரத்து அலுவலர் சந்திரசேகர், கயத்தாறு வட்டாட்சியர் பாஸ்கரன், மாவட்ட அறங்காவலர் குழு தலைவர் மோகன் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.

தொடர்ந்து புதூர், தெற்கு வீரபாண்டியபுரம் ஊராட்சி ஆகியவற்றில் சலவை தொழிலாளர்கள், தையலர், முடிதிருத்தும் தொழிலாளர்களுக்கு 765 பேருக்கு அத்தியாவசிய பொருட்களை அமைச்சர் கடம்பூர் ராஜூ வழங்கினார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in