கோவில்பட்டி கடலைமிட்டாய்க்கு புவிசார் குறியீடு வழங்கல்: உற்பத்தியாளர்கள் மகிழ்ச்சி

கோவில்பட்டி கடலைமிட்டாய்க்கு புவிசார் குறியீடு வழங்கல்: உற்பத்தியாளர்கள் மகிழ்ச்சி
Updated on
2 min read

தமிழர்களின் பாரம்பரிய உணவு பொருட்களின் அரசி என்றழைக்கப்படும் கோவில்பட்டி கடலைமிட்டாய்க்கு புவிசார் குறியீடு வழங்கப்பட்டுள்ளது. இதனால் உற்பத்தியாளர்கள், வியாபாரிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி மற்றும் சுற்றுவட்டார பகுதிகள் வானம் பார்த்த பூமியாகும். சுத்த கரிசல் மண்ணில் விளைவிக்கப்படும் நிலக்கடலைகளுக்கு எப்போதுமே தனி மவுசு உண்டு. இயற்கையாகவே இனிப்பு சுவையுடன் உள்ள இந்த நிலக்கடலைகளை கொண்டு தயாரிக்கப்படும் கடலைமிட்டாய்கள் உலக பிரசித்தி பெற்றதாகும்.

இந்த கடலை மிட்டாய்கள் சிங்கப்பூர், மலேசியா, இலங்கை, மாலத்தீவு உள்ளிட்ட நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன. மேலும், இந்தியா முழுவதும் கடலை மிட்டாய் விற்பனைக்கு அனுப்பி வைக்கப்படுகிறது.

கடந்த 3.7.2014 கோவில்பட்டி சார் ஆட்சியராக இருந்த விஜய கார்த்திகேயன் மூலம் கடலைமிட்டாய்க்கு புவிசார் குறியீடு பெற விண்ணப்பிக்கப்பட்டது. அதன் பின்னர் 2017-ல் விண்ணப்பம் மாற்றியமைக்கப்பட்டு கோவில்பட்டி வட்டார கடலைமிட்டாய் உற்பத்தியாளர் மற்றும் விற்பனையாளர் நலச்சங்கம் என்ற பெயரில் மறுசீரமைப்பு செய்து விண்ணப்பம் சமர்ப்பிக்கப்பட்டது. இதற்காக தமிழக அரசின் புவிசார் குறியீடு வழக்கறிஞர் ப.சஞ்சய் காந்தி ஆஜரானார்.

இந்நிலையில் நேற்று மத்திய அரசின் தொழில் மற்றும் வர்த்தகத்துறை கீழ் புவிசார் குறியீடு பதிவகம் வெளியிட்டுள்ள பட்டியலில் கோவில்பட்டி கடலைமிட்டாய், மணிப்பூர் கருப்பு அரிசி, உத்திரபிரதேச மாநிலம் கோரக்பூர் டெரகோட்டா ஆகியவற்றுக்கு புவிசார் குறியீடு வழங்கப்பட்டுள்ளது. இதனால் கோவில்பட்டி கடலை மிட்டாய் உற்பத்தியாளர்கள் மற்றும் விற்பனையாளர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

இதுகுறித்து தமிழக அரசின் புவிசார் குறியீடு பதிவு பெற்ற பொருட்கள் நோடல் ஆபிசர் வழக்கறிஞர் ப.சஞ்சய் காந்தி கூறும்போது, தமிழகத்தில் 20 பொருட்களுக்கு புவிசார் குறியீடு பெற்றுத்தந்துள்ளேன். ஏற்கெனவே 33 பொருட்களுக்கு புவிசார் குறியீடு கிடைத்துள்ளது. தற்போது 34-வது பொருளாக கோவில்பட்டி கடலை மிட்டாய்க்கு கிடைத்துள்ளது.

1940-ம் ஆண்டு முதல் கோவில்பட்டி கடலை மிட்டாய் உற்பத்தி செய்யப்பட்டு வருவதற்காக ஆவணங்களை சமர்பித்தோம். அப்போது முதன் முதலாக பொன்னம்பல நாடார் தான் கடலைமிட்டாய் தயாரித்தார்.

தாமிரபரணி தண்ணீர், கோவில்பட்டி மண்ணின் தன்மை, கரிசல் மண்ணில் விளையும் நிலக்கடலை, பனை வெல்லம் ஆகியவற்றுடன் விறகு அடுப்பை பயன்படுத்தி தயாரிப்பது தான் கடலைமிட்டாயின் சிறப்பு. கடலைமிட்டாயில் புரதம், வைட்டமின், தாது சத்து, ஊட்டச்சத்து உள்ளிட்ட அனைத்து வகை ஆற்றல் கொண்ட உணவாக உள்ளது. மருத்துவ குணங்களும் அதிகம் உள்ளன.

மேலும், கடலைமிட்டாய் பாகு தயாரிப்பதற்காக பதம் பார்ப்பது, எவ்வளவு மணி நேரத்தில் தயாரிப்பது, கடலைமிட்டாய் ரகம் வாரியாக வெட்டுவது என இதனை உற்பத்தி செய்தவற்கான தனித்திறமை அனைத்து கோவில்பட்டியில் உள்ள தொழிலாளர்களுக்கே உரிய தனிச்சிறப்பாகும்.

பராம்பரிய உணவு பொருட்களின் அரசி என்றழைக்கப்படும் கடலைமிட்டாய்க்கு புவிசார் குறியீடு பெற கடந்த 5 ஆண்டுகளாக போராடினேன். எனக்கு அமைச்சர் கடம்பூர் ராஜூ ஊக்கமளித்தார். தற்போது அதற்குரிய அங்கீகாரம் கிடைத்தது உளமார மகிழ்ச்சி. இனிமேல், கோவில்பட்டி கடலைமிட்டாய் என்ற பெயரில் கோவில்பட்டி நகரம் மற்றும் அருகே உள்ள கிராமங்களில் மட்டுமே கடலைமிட்டாய் உற்பத்தி செய்ய முடியும், என்றார் அவர்.

இதுகுறித்து கோவில்பட்டி வட்டார கடலைமிட்டாய் உற்பத்தியாளர் மற்றும் விற்பனையாளர் சங்க செயலாளர் கே.கண்ணன் கூறுகையில், கோவில்பட்டியில் 150 கடலைமிட்டாய் கடைகள் உள்ளன. இதில் சுமார் 6 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் ஈடுபட்டுள்ளனர். ஒரு கிலோ ரூ.160-க்கு விற்பனை செய்யப்படுகிறது. தற்போது புவிசார் குறியீடு கிடைத்துள்ளது எங்களுக்கு அங்கீகாரமாகும். எங்கள் வாழ்வாதாரம் பாதுகாக்கப்பட்டுள்ளது.

இனிமேல் கோவில்பட்டி கடலைமிட்டாய் என்ற பெயரில் வெளியூர்களில் கடலைமிட்டாய் தயாரிக்க முடியாது. எங்கள் மண்ணுக்கான பெருமையை வேறு யாரும் உரிமை கொண்டாட முடியாது. இனி கோவில்பட்டி என்ற பெயரை தவறாக பயன்படுத்தினால் சட்டப்பூர்வமான நடவடிக்கை எடுக்க முடியும். இதனால் கோவில்பட்டி பகுதி கடைகளுக்கு வெளிநாடுகளில் இருந்தும் ஆர்டர்கள் கிடைக்கும். மேலும், வேலை வாய்ப்பும் பெருகும், என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in