

முழு ஊரடங்கில் போலீஸாரின் கெடுபிடிகாரணமாக சென்னையில் பொதுமக்கள் வீடுகளில் முடங்கினர். நடமாடும் காய்கறிகடைகளுக்கு மட்டும் அனுமதி வழங்கப் பட்ட நிலையில், அந்த கடைகளில் காய் கறிகள் அதிக விலைக்கு விற்கப்பட்டன.
சென்னையில் கரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து, பாதிக்கப் பட்டோர் எண்ணிக்கை 600-ஐ நெருங்கி வருகிறது. இதைக் கட்டுப்படுத்த சென்னை மாநகராட்சி மற்றும் புறநகர் பகுதிகளில் 4 நாட்கள் முழு ஊரடங்கு நேற்று முன்தினம் அமல்படுத்தப்பட்டது.
2-ம் நாளான நேற்று மாநகரின் அனைத்து பகுதிகளிலும் பாலகங்கள் மற்றும் மருந்துக் கடைகள் தவிர அனைத்தும் மூடப்பட்டிருந்தன. மக்கள் நடமாட்டத்தைக் கட்டுப்படுத்த மாநகரம் முழுவதும்15 ஆயிரம் போலீஸார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர், இதனால் பொதுமக்கள் வெளியே செல்லாமல் வீடுகளிலேயே முடங்கினர். இதன் காரண மாக மாநகரின் அனைத்து சாலைகளும் வெறிச்சோடிக் காணப்பட்டன.
அனைத்து கடைகளையும் மூட உத்தரவிடப்பட்ட நிலையில், விதிகளை மீறி கடைகள் ஏதேனும் திறக்கப்பட்டுள்ளதா என மாநகராட்சி அதிகாரிகள், போலீஸா ருடன் இணைந்து ரோந்து சென்றனர்.
கோயம்பேடு சந்தையில் தக்காளி கிலோ ரூ.15-க்கு விற்கப்பட்ட நிலையில், மாநகராட்சி அனுமதியுடன் இயக்கப்பட்ட நடமாடும் காய்கறிக் கடைகளில் கிலோ ரூ.50 வரை விற்கப்பட்டது. இதே போன்று மற்ற காய்கறிகளின் விலையும் உயர்ந்தே இருந்தது. அதனால் இந்த கடைகளில் காய்கறி் வாங்க மக்கள் ஆர்வம் காட்டவில்லை.