

சென்னையில் கரோனா தீவிரமாக பரவுவதையொட்டி பொதுமக்கள் நடமாட்டத்தை கட்டுப்படுத்தும் விதமாக பாதுகாப்பு ஏற்பாடுகள் கடுமையாக்கப்படுகிறது. சென்னையில் முக்கிய சாலைகள் மூடப்பட்டது.
இந்தியாவில் கரோனா பாதிப்பு மிக அதிகமாக இருந்து வரும் நிலையில், தமிழகத்திலும் அதன் தாக்கம் அதிகரித்து வருகிறது. தமிழகம் இந்தியாவில் முதல் ஐந்து இடங்களில் ஒரு மாநிலமாக அதிக அளவில் கரோனா தொற்று பரவலை கொண்டுள்ளது.
மற்றொருபுறம் அதிகமான அளவில் ஹாட்ஸ்பாட் மாவட்டங்களை கொண்டுள்ள மாநிலமாக தமிழகம் இருக்கிறது. கிட்டத்தட்ட 26 மாவட்டங்கள் தமிழகத்தில் உள்ளன. அதிலும் சென்னை முதல் இடத்தில் இருக்கிறது. சென்னையில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே போகிறது.
நேற்று ஒரு நாளில் மட்டும் தமிழகத்தில் கரோனா பரிசோதனையில் வந்த எண்ணிக்கை 33 இதில் கிட்டத்தட்ட 15 பேர் சென்னை சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. முக்கியமாக மண்டலம் 1(திருவொற்றியூர்) மண்டலம் 5 (ராயபுரம்) மண்டலம் 8 (அண்ணாநகர்) ஆகிய மண்டலங்களில் அதிக அளவில் கரோனா தொற்று உள்ளது தெரியவந்துள்ளது.
அதிலும் குறிப்பாக (மண்டலம் 5) ராயபுரம் மண்டலத்தில் அதிக அளவில் தொற்றுள்ளவர்கள் உள்ளது தெரியவந்துள்ளது. இதையடுத்து நேற்று சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ், சென்னை காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் மற்றும் மண்டல உயர் அதிகாரிகள், காவல்துறை உயர் அதிகாரிகளுடன் சென்னையில் ஆலோசனை நடத்தினார்.
இதையடுத்து ஊரடங்கை கடுமையாக அமுல்படுத்த சென்னை மாநகராட்சி முடிவு செய்துள்ளது. அதேவேளையில் சென்னை கரோனா பரவும் வேகத்தை தடுத்து நிறுத்த பொதுமக்கள் வெளியில் சுற்றுவதை தடுக்கவும், கரோனா பாதித்தவர்களை தனிமைப்படுத்துதல், அவர்கள் வெளியே சுற்றுவதை கண்காணிக்கவும் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.
சென்னையில் ஊரடங்கு கடுமையாக்கப்படுகிறது. காவல்துறை கடுமையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. ஏற்கெனவே சென்னையில் ஊரடங்கு கடுமையாக அமல்படுத்தப்பட்டு வரும் நிலையில் தமிழகத்திலேயே சென்னையில் தான் அதிக அளவில் வழக்குகளும், வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
கடந்த 30 நாட்களில் மட்டும் சென்னையில் ஊரடங்கை மீறி சுற்றியதாக 27,819 நபர்களை போலீஸார் கைது செய்து ஜாமீனில் விடுவித்துள்ளனர். 27,298 பேர் மீது வழக்கு போடப்பட்டுள்ளது. ஊரடங்கை மீறி வெளியே சுற்றிய 36,893 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
சென்னையில் வாகன போக்குவரத்தை கட்டுப்படுத்தவும், பொதுமக்கள் தேவையின்றி அனாவசியமாக வெளியில் சுற்றுவதை தடுக்கவும் காவல்துறை கடுமையான நடவடிக்கைகளை எடுக்க உள்ளது. அதன்படி இனி இருசக்கர வாகனங்களில் ஒருவர் மட்டுமே பயணம் செய்ய வேண்டும்.
நான்கு சக்கர வாகனங்களில் இருவர் மட்டுமே பயணம் செய்ய வேண்டும் என்று என்ற உத்தரவும் கடுமையாக அமல்படுத்தப்பட உள்ளது. சென்னையில் போக்குவரத்து கடுமையாக முடக்கப்படுகிறது.
ஊரடங்கை மீறுபவர்களை தடுப்பதற்காக அண்ணாசாலையை சென்னை காவல்துறை மூடினர். அத்துமீறி சென்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று சென்னை காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
போலீஸார் கடுமையாக எச்சரிப்பதையும் மீறி பொதுமக்கள் வாகனங்களில் சுற்றி வருகின்றனர். இதனால் தற்போது பொதுமக்கள் அத்தியாவசிய தேவைகள் வாங்குவதற்காக அரசு ஒதுக்கப்பட்ட நேரத்தை தவிர்த்து மற்ற நேரங்களில் வெளியே சுற்றி திரிபவர்கள் மீதும் கடும் நடவடிக்கை எடுக்க சென்னை போலீஸார் முடிவு செய்துள்ளனர்.
இதனால் முதற்கட்டமாக முக்கிய சாலையான அண்ணா சாலையை சென்னை போலீஸார் மூடியுள்ளனர். சென்னை ஜெமினி மேம்பாலம் முதல் திருவல்லிக்கேணி வாலாஜா சிக்னல் வரை ஒரு பக்க சாலை மூடப்பட்டது.
காலை 6 மணி முதல் மதியம் 1 மணி வரை அத்தியாசிய பொருட்கள் வாங்கும் நேரம் தவிர பிற நேரங்களில் இச்சாலை திறக்கப்படாது. அத்திவாசிய பொருட்களுக்கு செல்பவர்கள் முழுமையாக தணிக்கை செய்யப்பட்ட பிறகே அனுமதிக்க காவல்துறை முடிவு செய்துள்ளனர்.
அண்ணாசாலையில் 6 வாகன சோதனை சாவடிகள் அமைத்து வாகன தணிக்கை நடத்தப்பட்டு வந்தது. இன்றிலிருந்து அது 12 ஆக உயர்த்தப்படுகிறது. ஊரடங்கு முடியும் வரை இந்த நடைமுறை பின்பற்றப்படும் என்று போலீஸார் தெரிவித்துள்ளனர்.
அத்தியாவசிய பொருட்கள் வாங்கும் நேரம் முடிந்த பின்பு கண்டபடி வெளியில் சுற்றும் வாகன ஓட்டிகளை கட்டுப்படுத்தவே இந்த நடவடிக்கை என போலீஸார் தெரிவித்துள்ளனர். அனுமதிக்கப்பட்ட நேரத்தில் அவசியத்துடன் வெளியே வருவதும், அனுமதி முடிந்த நேரத்தில் தேவையின்றி வெளியே வருவதையும் தவிர்க்க வேண்டும்.
அதையும் மீறி வெளியே சுற்றுபவர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என போலீஸார் எச்சரித்து உள்ளனர். முதற்கட்டமாக அண்ணா சாலையில் போக்குவரத்து முடக்கம் கடுமையாக்கப்பட்டுள்ள நிலையில் மேலும் பல சாலைகளை இனங்கண்டு அந்த சாலைகளையும் மூடுவதற்கு போலீஸார் கணக்கெடுப்பை தொடங்கியுள்ளனர்.