உபகரணங்கள் இல்லாததால் போராட்டத்தை அறிவித்த மருத்துவர்கள்: அரசு தலையீட்டின் பேரில் வாபஸ்

உபகரணங்கள் இல்லாததால் போராட்டத்தை அறிவித்த மருத்துவர்கள்: அரசு தலையீட்டின் பேரில் வாபஸ்
Updated on
1 min read

போதிய உபகரணங்கள் வழங்கப்படவில்லை எனக் கடிதம் எழுதிய ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனை மருத்துவர்கள் இன்று மதியம் பணியைப் புறக்கணிப்பதாக அறிவித்திருந்தனர். இந்நிலையில் முதல்வர், பொது சுகாதாரத்துறை அதிகாரிகள் தலையீட்டின் பேரில் போராட்டத்தை வாபஸ் பெற்றனர்.

கரோனா தொற்று நடவடிக்கையில் முன்னணிப் படைவரிசை வீரர்கள் என அழைக்கப்படுபவர்கள் மருத்துவர்கள், மருத்துவப் பணியாளர்கள், செவிலியர்கள். இவர்கள் தொடர்ச்சியாக நோயாளிகளின் பிணி தீர்க்கப் போராடி வருகின்றனர். சிகிச்சை செய்யும் மருத்துவர்களுக்கு அத்தியாவசியத் தேவையாக பாதுகாப்புக் கவச உடை, என் 95 முகக்கவசம், கையுறை, சானிடைசர் உள்ளிட்ட உபகரணங்கள் தேவைப்படுகின்றன.

இதுதவிர மருத்துவர்கள் ஓய்வெடுப்பதற்கான வசதி, உணவு, கவச உடைகள் உரிய நேரத்தில் மாற்றும் ஏற்பாடு போன்ற கோரிக்கைகள் மருத்துவர்களிடம் உள்ளன.

மருத்துவர்களுக்குத் தேவையான உபகரணங்கள் போதுமான அளவுக்கு இருக்கின்றன என அமைச்சர் முதல் சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்து வருகின்றனர். ஆனால், ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் போதிய உபகரணங்கள் தங்களுக்கு வழங்கப்படவில்லை என மருத்துவர்கள் ஆட்சேபம் தெரிவித்து தங்கள் கோரிக்கையை இரண்டு நாட்களுக்கு முன் கடிதமாக அளித்தனர் என்று கூறப்படுகிறது.

அதற்குத் தகுந்த பதில் கிடைக்காததால் இன்று மதியம் பணிப் புறக்கணிப்புப் போராட்டம் நடத்த உள்ளதாக மருத்துவர்கள் அறிவித்ததாகத் தகவல் வெளியானது. இதையடுத்து அவர்களிடம் டீன் ஜெயந்தி பேச்சுவார்த்தை நடத்தினார். அது நல்லபடியாக அமைந்ததாகக் கூறப்படுகிறது.

அதன் பின்னர் முதல்வர் காணொலி மூலம் மருத்துவர்கள், செவிலியர்களிடம் பேசினார். பொது சுகாதாரத்துறையும் பேச்சுவார்த்தை நடத்திய நிலையில், தங்கள் கோரிக்கை ஏற்கப்பட்டதால் போராட்ட அறிவிப்பை மருத்துவர்கள் கைவிட்டனர்.

இதுகுறித்து கருத்து தெரிவித்த சில மருத்துவர்கள், “நாங்கள் இன்று போராட்டம் நடத்துவதாக சமூக வலைதளங்களில் ஒரு தகவல் பரவியது. அது முற்றிலும் தவறான விஷயம், எங்களுக்குச் சில கோரிக்கைகள் இருந்தன. அதுகுறித்து நிர்வாகத்திடம் விவாதித்தோம். அதில் கோரிக்கை நியாயமானது. அதைச் சரி செய்து தருகிறோம் என நிர்வாகத்தினர் தெரிவித்தனர். நிர்வாகம் எங்களுக்கு ஒத்துழைப்பு அளிக்கிறது'' என்று தெரிவித்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in