Published : 21 Apr 2020 04:08 PM
Last Updated : 21 Apr 2020 04:08 PM

சென்னையில் அதிகம் கரோனா தொற்றுள்ள மண்டலங்களில் காவல்துறையுடன் இணைந்து கடும் பாதுகாப்பு: மாநகராட்சி ஆணையர் பேட்டி

தமிழகத்தில் கரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில் சென்னையில் அதன் தாக்கம் அதிகரித்துள்ளது. அதிலும் ராயபுரம் மண்டலத்தில் அதிக அளவில் பாதிப்புள்ளது. சென்னையில் நடத்தப்பட்ட ரேபிட் டெஸ்ட் ஆய்விலும் அதிக அளவில் தொற்று பாதிப்பின் ஆரம்ப அறிகுறியுடன் பலர் இருப்பது தெரியவந்தது.

ராயபுரத்தில் உள்ள கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில் சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ், காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன், காவல் கூடுதல் ஆணையர் தினகரன், மாநகராட்சி கூடுதல் சுகாதார ஆணையர் ஆகியோர் ஆய்வு மேற்கொண்டனர். ஆய்வு மேற்கொள்வதற்கு முன்னதாக ராயபுரத்தில் உள்ள துணை ஆணையர் அலுவலகத்தில் கரோனா நடவடிக்கைகள் தொடர்பான கூட்டம் இன்று நடைபெற்றது.

பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் கூறியதாவது:

“ராயபுரத்தில் உள்ள கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில் ஆய்வு செய்தோம். அதன் முடிவில் அத்தகைய வார்டுகளைத் தனித்தனியாக கவனிப்பது குறித்து திட்டம் ஒன்று தயார் செய்துள்ளோம். அதன் அடிப்படையில் இப்பகுதி மக்களின் தேவை, பாதுகாப்பு, போக்குவரத்து உள்ளிட்டவற்றைக் கணக்கில் கொண்டு பாதிப்பு அதிகம் உள்ள பகுதியில் 3 கட்டப் பாதுகாப்பு போன்றவற்றை அமல்படுத்த உள்ளோம்.

பாதிப்பு வந்துள்ள நடுப்பகுதியில் மிகவும் இறுக்கமான பாதுகாப்பை செய்ய உள்ளோம். அம்மக்கள் வெளியே வராதவாறு அவர்களுக்கு வேண்டிய காய்கறி, மளிகைப்பொருள் உள்ளிட்டவற்றைக் கொடுக்க உள்ளோம். அதற்கு அடுத்த நிலையில் உள்ள பகுதியில் பேரிகார்டு போட்டு அடிப்படையான நடமாட்டம் மட்டும் போட்டு,வெளி ஆட்கள் உள்ளே வந்து செல்லாதவாறு பாதுகாப்பு ஏற்பாடு செய்ய உள்ளோம்.

3-வது நிலையில் உள்ள இடங்களில் அடிப்படையான தேவைகளுக்காக மட்டும் மக்கள் வெளியே வருவதற்கு அனுமதியும், மூன்றாம் கட்டமாக வாகனங்கள் நெரிசல் இல்லாமல் செல்வதற்கும், போக்குவரத்து மாற்றம் செய்யத் திட்டமிடப்பட்டுள்ளது.

வடசென்னையில் உள்ள இப்பகுதி கோயம்பேடு மார்க்கெட்டில் காய்கறி, பழ வகைகளுக்குப் பேர்போனதோ அதேபோல் பருப்பு வகைகளுக்கு இப்பகுதி முக்கியத்துவம் வாய்ந்தது. இப்பகுதியிலிருந்து தமிழகம் முழுவதும் ஏற்றுமதி ஆகிறது. ஆகவே, அதுவும் பாதிக்காத வண்ணம், அதே நேரத்தில் நோய்த்தொற்று பாதிக்காத வண்ணம் என்ன வகையான ஏற்பாடு செய்வது என்பது குறித்து இன்று மாலை மொத்த வியாபாரிகளுடன் கலந்தாய்வு நடத்த உள்ளோம்.

சென்னையில் 303 பேருக்கு கரோனா தொற்று பாதிப்பை உறுதி செய்தது ரேபிட் டெஸ்ட் மூலமாகத்தான். ஆகவே இதுவே இறுதியானது அல்ல. பிசிஆர் டெஸ்ட் தான் முக்கியம். அதன் மூலம்தான் நோய்த்தொற்று உறுதிப்படுத்தப்படும். ரேபிட் டெஸ்ட் முன்னெச்சரிக்கை நடவடிக்கைக்காக நாம் எடுப்பது ஆகும்.

தனிமைப்படுத்துதலில் ஆரம்பித்தபோது 24,000 ஆக இருந்தது. இப்போது 3,233 வீடுகள் உள்ளன. இன்று வரும் ஆய்வு முடிவுகளை வைத்து தினம் 100, 200 பேர் என்றால் அவர்களைத் தனிமையில் இருக்கச் சொல்கிறோம். ஆகவே, பெரிய அளவிலான அந்த எண்ணிக்கை குறைந்துவிட்டது. ஆகவே நோய் வந்தவர்கள் அதன் தனிமைப்படுத்துதல் காலகட்டத்தில் வெளியே வரக்கூடாது என்றால் அதைக் கடைப்பிடிக்க வேண்டும். அதையும் மீறி வெளியில் வருபவர்கள் நமது கவனத்திற்கு வரும்போது நடவடிக்கை எடுக்கிறோம்.

அதை மீறி நடக்கும்போது அவர்கள் மீது குற்ற நடவடிக்கையோ, கடும் நடவடிக்கையோ எடுப்பது சரியாக இருக்காது என்பதால்தான் அவர்கள் அதன் தீவிரத்தை உணர்ந்து அரசு சொல்வதை ஏற்று நடக்க வேண்டும். அவரவர்கள் ஒழுக்கத்துடன் நடந்து கடைப்பிடிப்பதுதான் இதற்குத் தீர்வு என்பதை பலமுறை கூறிவிட்டோம். அவரவர் உணர்ந்துதான் நடக்க வேண்டும்''.

இவ்வாறு சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x