

மதுரையில் கரோனா தடுப்பு மற்றும் பாதுகாப்புப் பணியிலுள்ள 1500 காவலர்களுக்கு தினமும் உணவு, பழங்களை வழங்கும் தனியார் நிறுவனத்தாருக்கு காவல் ஆணையர் டேவிட்சன் தேவாசீர்வாதம் நன்றி தெரிவித்தார்.
கரோனா வைரஸ் பரவலைத் தடுக்க, பிறபிக்கப்பட்டுள்ள ஊரடங்கை அமல்படுத்தும் வகையில், மதுரை மாநகரின் அனைத்துப் பகுதிகளிலும் காவல் துறையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
தவிர்க்க முடியாத சில சூழலில் சாப்பிடுவதற்கு வீடுகளுக்கு செல்ல முடியாமல் உள்ளனர். இரவு, பகலாக பணியிலுள்ள காவலர்களின் சீரிய பணிக்கு உதவிடும் நல்லெண்ணத்தில் மார்ச் 26-ம் தேதி முதல் மதுரை வெள்ளரிபட்டி டிவிஎஸ் சக்ரா டயர் நிறுவனமும்,‘ யாவும் இனிதே’ அறக்கட்டளை நிர்வாகமும் இணைந்து தாமாக முன்வந்து தினந்தோறும் 1500 காவலர்கள் உட்பட ஊர்காவல் படையினருக்கு உணவு, பிஸ்கெட், பழங்கள், சத்து உருண்டைகளை தொடர்ந்து வழங்குகின்றனர்.
இவர்களை மாநகர் காவல்துறை ஆணையர் டேவிட்சன் தேவாசீர்வாதம் பாராட்டினார்.
மேலும், ஆணையர் உணவு தயாரிக்கும் வெள்ளரிப்பட்டி இடத்திற்கே சென்ற காவல் ஆணையர், சுகாதாரமான முறையில் உணவு தயாரிக்கப்படுகிறதா என, ஆய்வு செய்தார். இப்பணியில் ஈடுபடும் அனைத்து ஊழியர்களுக்கும் அவர் பாராட்டு தெரிவித்தார்.