கட்டுப்பாடுகளைத் தகர்த்து கறி விருந்து நடத்தும் இளைஞர்கள்: காவல்துறைக்கு அடுத்த தலைவலி

கட்டுப்பாடுகளைத் தகர்த்து கறி விருந்து நடத்தும் இளைஞர்கள்: காவல்துறைக்கு அடுத்த தலைவலி

Published on

ஊரடங்கு காரணமாக வீட்டிலிருந்தபடியே டிக் டாக்கில் விளையாடிக் கொண்டிருந்த இளைஞர்கள், இப்போது ஆங்காங்கே ஆர்ப்பாட்டமாக கறி விருந்து நடத்தி காவல் துறையிடம் சிக்கி வருகிறார்கள்.

தஞ்சை மாவட்டம் பாபநாசத்தில் ஆரம்பித்த இந்த கறி விருந்து கலாச்சாரம், கரோனா வைரஸ் கணக்காய் இளைஞர்களிடம் வேகமாகப் பரவிக் கொண்டி ருக்கிறது. நேற்று நாகை மாவட்டத்தில் கறி விருந்து நடத்தியதாக பத்து இளைஞர்கள் காவல்துறையால் கைது செய்யப்பட்டனர்.

மயிலாடுதுறை அருகேயுள்ள வில்லியநல்லூர் கிராம இளைஞர்கள் பத்துப்பேர் பொழுது போகாமல் ஒன்று சேர்ந்தனர். என்ன செய்யலாம் என்று யோசித்தவர்கள் பிரியாணி செய்து சாப்பிட லாம் திட்டமிட்டனர். பிரியாணி என்றதும் மேலும் இருபது பேர் கூட்டணி சேர்ந்தனர். உடனே, வாய்க்கால் மதகு ஓரமாக தடபுடலாகப் பிரியாணி தயாரானது. அனைவரும் கூட்டாக அமர்ந்து அதனை ருசித்தனர். அதனை அப்படியே வீடியோவாகப் பதிவு செய்து டிக்டாக்கில் பதிவிட்டனர்.

ஊரடங்கு சமயத்தில் சமூக விலகலை கடைபிடிக்காமல் இவர்கள் பிரியாணி விருந்து சாப்பிட்டு அதை டிக் டாக்கிலும் வலம்வர வைத்தது அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதனையடுத்து சுதாரித்துக் கொண்ட மணல்மேடு காவல்துறையினர், கலைமணி, ராஜேஷ், வெங்கடேஷ், தினேஷ், சதீஷ்குமார், அரவிந்த், அருண், சிவா, பாலமுருகன், பாலச்சந்தர் ஆகிய 10 பேரைக் கைது செய்தனர். பிரியாணியை ருசித்த மேலும் சிலரைத் தேடியும் வருகின்றனர்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in