

100 நாள் வேலைத்திட்டப் பணியாளர்களுக்கு ஏப்.1 முதல் தினசரி ஊதியம் ரூ.256 ஆக உயர்த்தப்பட்டுள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.
நாடு முழுவதும் கரோனாவைரஸ் தொற்று பரவலைத் தடுக்க கடந்த மார்ச் 24-ம்தேதி நள்ளிரவு முதல் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டது.
நிதி அமைச்சர் அறிவிப்பு
அடுத்த சில தினங்களில் மத்திய அரசு சார்பில் பல்வேறு நலத்திட்டங்களையும், சலுகைகளையும் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்தார். அதில், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித்திட்ட (100 நாள் வேலைத் திட்டம்) தொழிலாளர்களுக்கான ஊதிய உயர்வும் அடங்கும்.
அதன்படி ஏப்ரல் முதல், ஊழியர்களுக்கான ஊதியம் பணிநாள் ஒன்றுக்கு ரூ.256 ஆக உயர்த்தப்படும் என்றுஅறிவிக்கப்பட்டது. இதுதொடர்பான அறிவிக்கை்யை மத்திய அரசு வெளியிட்டது.
தமிழக அரசுக்கு கடிதம்
இந்நிலையில், ஊரகவளர்ச்சித் துறை இயக்குநர், தமிழக அரசுக்கு எழுதிய கடிதத்தில், கடந்த 2019-20-ம்ஆண்டு முதல், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைஉறுதித் திட்டத்தின்கீழ் மேற்கொள்ளப்படும் பணிகளுக்கு மதிப்பீடு தயாரித்தல், நிர்வாகஅனுமதி, தொழில்நுட்ப அனுமதி ஆகியவை வழங்குவதற்கு ‘செக்யூர்’ எனப்படும் பிரத்யேக மென்பொருள் தயாரிக்கப்பட்டு, அதை கேரளாவில் உள்ள தேசிய தகவல் மையம், மத்திய ஊரகவளர்ச்சித் துறையின் கண்காணிப் பின் கீழ் பராமரித்து வருகிறது. அந்த மென்பொருளில் ஏப்ரல்மாதம் 1-ம் தேதி முதல் ஊதியத்தை ரூ.229 லிருந்து ரூ.256 ஆக உயர்த்தப்பட்டுவிட்டது.
இந்நிலையில், கிராமப்பகுதிகளில் வெவ்வேறு மண் பரப்புகளில் மேற்கொள்ளப்படும் பல்வேறு பணிகள், மரம் நடுதல் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு இந்த 2020-21-ம் ஆண்டுக்கு வழங்கப்படும் ஊதியத்துக்கு அனுமதியளிக்க வேண்டும் என்று கோரியிருந்தார்.
இந்த கோரிக்கையை பரிசீலித்த தமிழக அரசு அதற்கான அனுமதியளித்து, ஊரக வளர்ச்சித் துறை சார்பில் அரசாணையாக பிறப் பித்துள்ளது.