

"கரோனா வைரஸ் பாதிப்பால் வாழ்வாதாரம் இழந்த தவிக்கின்ற கிராமமக்களுக்கு உதவ மத்திய, மாநில அரசுகள் எந்த முயற்சியும் மேற்கொள்ளவில்லை", என திமுக மாநில துணைப்பொதுச்செயலாளர் முன்னாள் அமைச்சர் இ.பெரியசாமி தெரிவித்தார்.
டாக்டர் அம்பேத்கர் பிறந்தநாள் விழாவை முன்னிட்டு திண்டுக்கல்லில் உள்ள திமுக அலுவலகத்தில் அவரது படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செய்த திமுக மாநில துணைப்பொதுச்செயலாளரும் முன்னாள் அமைச்சருமான இ.பெரியசாமி செய்தியாளர்களிடம் கூறியதாவது:
கரோனா வைரஸ் பாதிப்பால் வாழ்வாதாரம் இழந்து தவிக்கின்ற கிராமமக்களுக்கு உதவுவதற்கு மத்திய, மாநில அரசுகள் எந்த முயற்சியும் மேற்கொள்ளவில்லை. தொழிலாளர்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அவர்களின் பி.எப்.,(பிராவிடண்ட் பண்ட்) பணத்தை கொடுத்தால் கூட அவர்களது வாழ்வாதாரம் நன்றாக இருக்கும். அதை கொடுக்க மத்திய அரசு தயாராக இல்லை.
அண்டை மாநிலமான கேரளாவில் கரோனா வைரஸைக் கட்டுப்படுத்த மிகச்சிறப்பான நடவடிக்கைகள் மேற்கொண்டுவருகிறது. இதை அறிந்துகொள்ளக்கூட தமிழக அரசு தயாராக இல்லை, என்றார்.