எங்களையும் சேர்த்துக் கொள்ளுங்கள் ஐயா: ட்விட்டரில் தன்னார்வலர் எழுப்பிய கேள்விக்கு முதல்வர் பழனிசாமி பதில்

எங்களையும் சேர்த்துக் கொள்ளுங்கள் ஐயா: ட்விட்டரில் தன்னார்வலர் எழுப்பிய கேள்விக்கு முதல்வர் பழனிசாமி பதில்
Updated on
1 min read

எங்களையும் சேர்த்துக் கொள்ளுங்கள் ஐயா என்று ட்விட்டரில் சமூக தன்னார்வலர் எழுப்பிய கேள்விக்கு தமிழக முதல்வர் பதிலளித்துள்ளார்

தமிழகத்தில் கரோனா தொற்றின் தீவிரம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. மத்திய அரசு அறிவித்துள்ள 21 நாட்கள் ஊரடங்கால் பொதுமக்கள் அனைவரும் வீட்டிற்குள்ளேயே முடங்கி இருக்கிறார்கள்.

இந்தச் சமயத்தில் தமிழக அரசு மட்டுமின்றி அரசியல் கட்சிகள், முன்னணி நிறுவனங்கள், திரையுலகப் பிரபலங்கள் எனப் பலரும் உதவிகள் செய்து வருகிறார்கள். மேலும், தன்னார்வலர்கள் பலரும் களத்தில் பணிபுரிந்து வருகிறார்கள்.

மேலும், கரோனா விழிப்புணர்வு தொடர்பான விளம்பரங்களைத் தமிழக அரசு ட்விட்டரில் வெளியிட்டு வருகிறது. இதில் "நமக்காக உழைப்போருக்கு நாமும் ஒத்துழைப்போம்!" என்ற விளம்பரத்தைத் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்திருந்தார். அந்த விளம்பரத்தில் தூய்மை பணியாளர்கள், காவல்துறையினர், மருத்துவர்கள், செவிலியர்கள் ஆகியோரின் படங்கள் மட்டுமே இடம் பெற்றிருந்தன.

இந்த விளம்பரத்துக்கு பலரும் கருத்துக்கள் தெரிவித்தார்கள். அதில் கிறிஸ்டோபர் என்ற தன்னார்வலர் "ஐயா இந்த லிஸ்டில் எங்களை போன்ற சமூக தன்னார்வலர்களையும் சேர்த்துக் கொள்ளுங்கள்.அவ்வாறு செய்தால் அது எங்கள் பணியை மேலும் சிறப்பாகச் செய்ய ஊக்கம் தரும்" என்று கோரிக்கை விடுத்தார்.

அவருக்குப் பதிலளிக்கும் விதமாக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி "கண்டிப்பாக தம்பி, தங்களைப் போன்ற தன்னார்வலர்களின் பணியும் பங்களிப்பும் அளப்பரியது. கரோனாவிற்கு எதிரான இந்த போராட்டத்தில் மக்களைக் காக்க ஓயாது பணியாற்றி வரும் தங்களுக்கும், தன்னார்வலர்கள் அனைவருக்கும் எனது உளமார்ந்த வாழ்த்துகளும், பாராட்டுதல்களும்!" என்று தனது ட்விட்டர் பதிவில் தெரிவித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in