ஊரடங்கால் மது இல்லாமல் அவதி: மீண்டுவர செல்போனில் இலவச உதவி

ஊரடங்கால் மது இல்லாமல் அவதி: மீண்டுவர செல்போனில் இலவச உதவி
Updated on
1 min read

ஊரடங்கு உத்தரவு காரணமாக டாஸ்மாக் மதுபானக்கடைகள் மூடப்பட்டிருப்பதால், மது கிடைக்காமல், சிலர் உடலளவிலும், மனதளவிலும் தவித்துக்கொண்டிருப்தையும், தற்கொலை முடிவுவரை சென்றிருப்பதையும் பார்த்துக்கொண்டிருக்கிறோம்.

அவர்களின் தவிப்பை, குடியிலிருந்து மீண்டுவந்தவர்களால் மட்டுமே உணர்ந்துகொள்ள முடியும். இந்தச்சூழலில், அவர்களுக்கு ஏற்படும் கை, கால் நடுக்கம், தூக்கமின்மை, பதட்டம் போன்றவற்றிலிருந்து வெளிவர மருத்துவர்களிடம் சிகிச்சை பெறுவது அவசியம். இது அவர்களின் உடல், மனதளவில் ஏற்படும் வேதனையை சரிசெய்ய உதவக்கூடும்.

இதுதவிர, மீண்டும் குடிப்பழக்கத்துக்கு திரும்பாமல் இருக்கவும், அவ்வப்போது மீண்டும் எழும் குடி எண்ணங்களிலிருந்து காப்பாற்றிக் கொள்ளவும் ‘ஆல்கஹாலிக்ஸ் அனானிமஸ்’ (ஏஏ) என்ற அமைப்பு உதவி வருகிறது. உலகம் முழுவதும் இயங்கிவரும் இந்த அமைப்பு, லட்சக்கணக்கான குடிநோயாளிகளை இதுவரை மீட்டெடுத்துள்ளது.

இந்த அமைப்பின் மூலம் மீண்டுவந்த குடிநோயாளிகள், இன்னும் அவதியுறும் குடிநோயாளிகள், குடியிலிருந்து மீண்டுவர தங்களது நேரத்தைச் செலவழித்து இலவசமாக உதவி வருகின்றனர். மேலும், இந்த அமைப்பில் இணையும் எந்தவொரு உறுப்பினரது பெயரோ அல்லது ஏனைய விவரங்களோ எந்தவிதத்திலும் வெளியிடப்படாமல் ரகசியம் காக்கப்படுகிறது.

இதுதொடர்பாக ஏஏ அமைப்பின் உறுப்பினர்கள் சிலர் கூறுகையில், “இக்கட்டான சூழலில், அரசு அறிவிப்புக்கு மதிப்பளித்து நாங்கள் ஆன்லைன் மூலம் கூட்டங்கள் மற்றும் செல்போன் வாயிலாக எங்கள் அனுபவரீதியான ஆலோசனைகளை வழங்கி வருகிறோம். தங்களுக்கோ, தங்களை சார்ந்தவர்களுக்கோ குடி பிரச்சினை இருந்து, அதிலிருந்து விடுபட நினைத்தால் 9788706050, 9940891605 என்ற இலவச உதவி எண்களில் தொடர்பு கொள்ளலாம். கூடுதல் விவரங்களை www.aagsoindia.org என்ற இணையதளத்தில் தெரிந்துகொள்ளலாம்” என்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in