மது போதைக்காக குளிர்பானத்தில் ஷேவிங் லோஷனை கலந்து குடித்த மீனவர்கள் 2 பேர் உயிரிழப்பு; மற்றொருவர் கவலைக்கிடம்

பிரதிநிதித்துவப் படம்
பிரதிநிதித்துவப் படம்
Updated on
1 min read

புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைப்பட்டினத்தில் மதுபோதைக்காக முக சவரம் செய்வதற்கு பயன்படுத்தப்படும் லோஷனை குளிர்பானத்தில் கலந்து குடித்த மீனவர்கள் 2 பேர் பரிதாபமாக இறந்தனர்.

கோட்டைப்பட்டினம் மீனவர் காலனியை சேர்ந்தவர்கள் எம்.அசன் மைதீன் (35), பி.அன்வர் ராஜா(33), எம். அருண்பாண்டி(29). மீனவர்களான இவர்கள் 3 பேரும் டாஸ்மாக் மதுபானக் கடைகள் மூடப்பட்டுள்ளதால் மது போதைக்காக நேற்று (ஏப்.3) நள்ளிரவில் அங்குள்ள தர்கா அருகே முக சவரம் செய்த பிறகு முகத்தில் தடவக்கூடிய லோஷனை குளிர்பானத்தில் கலந்து குடித்துள்ளனர்.

பின்னர், அன்வர் ராஜா வீட்டுக்கு சென்றுவிட்டார். அசன் மைதீனும், அருண்பாண்டியனும் அதே இடத்தில் வாந்தி எடுத்து உடல்நலக் குறைவுடன் துடிதுடித்துக் கொண்டிருந்தனர். இதை அறிந்த அப்பகுதியினர் 2 பேரையும் மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் மணமேல்குடி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பிறகு, வீட்டில் இருந்த அன்வர் ராஜாவையும் மீட்டு மணமேல்குடி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

இந்நிலையில், சிகிச்சை பலனின்றி அசன் மைதீன், அருண்பாண்டி ஆகியோர் உயிரிழந்தனர். அன்வர் ராஜா கவலைக்கிடமான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்த சம்பவம் குறித்து கோட்டைப்பட்டினம் போலீஸார் விசாரித்து வருகின்றனர். மதுபானம் கிடைக்காத விரக்தியில் மது போதைக்காக மாற்று வழி தேடிய இருவர் பரிதாபமாக உயிரிழந்தது அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in