

தமிழக அரசு அறிவித்துள்ள கரோனா நிவாரணத் தொகை ரூ.1,000 மற்றும் இலவச ரேசன் பொருட்கள் இன்று முதல் வழங்கப்படுகிறது. டோக்கன் வாங்கியவர்கள் மட்டுமே ரேசன் கடைகளுக்கு சென்று, சமூக இடைவெளியைக் கடைபிடித்து இந்த நிவாரணத்தை வாங்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
கரோனா வைரஸ் பரவலைத் தடுக்க நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ள ஏழைகள் மற்றும் நடுத்தர மக்களுக்கு, தமிழக அரசு ரூ.1,000 ரொக்கம் மற்றும் ஒரு மாத ரேசன் பொருட்கள் நிவாரணமாக வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டு இன்று (ஏப்.2) முதல் ரேசன் கடைகளில் வழங்கப்பட உள்ளதாக அறிவிப்பு வெளியிடப்பட்டது.
இந்த நிவாரண உதவியைப் பெற ரேசன் கடைகள் முன் கூட்டம் சேருவதைத் தவிர்க்க, சுழற்சி முறையில் முன்கூட்டியே டோக்கன்கள் வழங்கப்படுகின்றன. வீடுகளுக்கு சென்று ரேசன் கடை ஊழியர்கள் இந்த டோக்கன்களை வழங்கி வருகின்றனர்.
அதில் நிவாரணம் வழங்கப்படும் நாள், நேரம் குறிக்கப்பட்டுள்ளது. எனவே,டோக்கன் வாங்கியவர்கள் மட்டும் ரேசன் கடைகளுக்கு சென்று சமூக இடைவெளியை பின்பற்றி நிவாரணத்தொகை ரூ.1,000 மற்றும் ரேசன் பொருட்களை பெற்று செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதன் பேரில் டோக்கன் பெற்ற மக்கள் இன்று ரேசன் கடைகளில் சமூக இடைவெளியை பின்பற்றி பொருட்களை பெற்று செல்ல வந்தனர்.
கரோனா நிவாரண நிதி ரூ.1,000 மற்றும் இலவச ரேசன் பொருட்களை பெற்றுச் செல்ல கோவை குனியமுத்தூர் பகுதியில் உள்ள தொடக்க வேளாண்மை கூட்டறவு சங்கத்தின் கீழ் செயல்படும் இரு ரேசன் கடைகளில் நீண்ட வரிசைகளில் சமூக இடைவெளி விட்டு காத்திருந்த பொது மக்களுக்கு உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி வழங்கி தொடங்கி வைத்தார்.
அப்பொழுது, அவர் போதுமான சமூக இடைவெளியை கடைபிடிக்க வலியுறுத்தவும், 100 ரேசன் கார்டுகள் தவிர்த்து கூடுதல் குடும்ப அட்டைகளுக்கும் வழங்க வேண்டும் எனவும் கடை ஊழியர்களுக்கு அறிவுறுத்தினார்.
பின்னர், செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, "கரோனா நிவாரண நிதியாக ரூ.1,000 மற்றும் ரேசன் பொருட்கள் வழங்க தமிழக அரசு ரூ.3,280 கோடி ஒதுக்கீடு செய்துள்ளது.
கோவை மாவட்டத்தில் 9.77 லட்சம் குடும்ப அட்டைதார்களுக்கு நிவாரணம் வழங்கப்பட உள்ளது. டெல்லி மாநாட்டில் கலந்துகொண்ட கோவையை சேர்ந்த 10 பேரை தேடும் பணியில் சிறப்புக்குழுக்களை அமைத்து தேடி வருகின்றனர். தாமாகவே முன் வந்து தங்களை தனிமைப்படுத்திக்கொள்ள அவர்கள் முன் வர வேண்டும்" என வேண்டுகோள் விடுத்தார்.
பொதுமக்களும் தங்களது பங்கினை போதுமான சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும் எனவும் உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கேட்டுக்கொண்டார்.பின்னர்,கோவை மாநகராட்சியில் உள்ள அனைத்து வார்டுகளிலும் அத்தியாவசிய பொருட்களான காய்கறிகள் தங்குதடையின்றி கிடைக்க வழி செய்யும் வகையில் நடமாடும் காய்கறி வாகனத்தினையும் துவக்கி வைத்தார்.
அதனை தொடர்ந்து கோவை கலெக்டர் அலுவலகத்தில் உள்ள கூட்ட அரங்கில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து அதிகாரிகளுடன் ஆலோசனை கூட்டம் உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தலைமையில் நடைபெற உள்ளது.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட கலெக்டர் கு.ராசாமணி உட்பட அரசு அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.