சிறுசேமிப்பு வட்டி, பிஎஃப் வட்டியைக் குறைத்து மேலும் மக்களுக்கு இன்னல்: கே.எஸ்.அழகிரி கண்டனம் 

சிறுசேமிப்பு வட்டி, பிஎஃப் வட்டியைக் குறைத்து மேலும் மக்களுக்கு இன்னல்: கே.எஸ்.அழகிரி கண்டனம் 
Updated on
1 min read

மத்திய அரசிடம் நமது பணம் பாதுகாப்பாக இருக்கும் என்கிற நம்பிக்கையைச் சீர்குலைத்து சிறுசேமிப்பு செய்கிற பழக்கத்தில் பின்னடைவு ஏற்படுகிற வகையில் பிஎஃப், சிறுசேமிப்புக்கு வழங்கும் வட்டியைக் குறைத்து, வாங்கும் சக்தி இல்லாமல் மக்கள் இருக்கிற நிலையில் இத்தகைய அறிவிப்புகள் வெந்தபுண்ணில் வேல்பாய்ச்சுவதாகும் என கே.எஸ்.அழகிரி கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி இன்று வெளியிட்ட அறிக்கை:

“வரலாறு காணாத வகையில் கரோனா தொற்றுநோயை எதிர்த்து மக்கள் உயிரைக் காப்பாற்றுவதற்காக வீட்டிற்குள்ளே முடங்கி வேலைவாய்ப்பை இழந்து வருமானத்தைப் பறிகொடுத்து வாழ்வாதாரத்திற்காக கடும் போராட்டத்தை நடத்தி வருகிறார்கள். இந்நிலையில் மத்திய அரசின் நடவடிக்கைகள் மக்கள் நலன் சார்ந்ததாக இல்லாமல் மக்களை துன்புறுத்துகிற வகையில் அமைந்திருப்பது மிகுந்த வேதனைக்குரியது.

சிறுசேமிப்பு திட்டங்கள், தொழிலாளர் வருங்கால வைப்புநிதி உள்ளிட்டவற்றுக்கு வட்டி விகிதத்தை ஏப்ரல் 1 ஆம் தேதி முதல் குறைக்கப்போவதாக மத்திய அரசு சமீபத்தில் அறிவித்திருக்கிறது. தற்போது சிறுசேமிப்புகளுக்கு வழங்கப்பட்டுவரும் 7.9 சதவீத வட்டியை 7.1 சதவீதமாக குறைக்கப்பட்டிருக்கிறது.

கடந்த 40 ஆண்டுகளில் இல்லாத அளவில் வட்டி விகிதம் குறைக்கப்பட்டிருப்பது மிகுந்த கண்டனத்திற்குரியது. அதேபோல தொழிலாளர்கள் வருங்கால வைப்புநிதிக்கான வட்டி விகிதத்தை 8.65 சதவீதத்திலிருந்து 8.50 சதவீதமாக குறைக்கப்பட்டிருக்கிறது. இதனால் தொழிலாளர்கள் பெறுகிற வருமானம் கடுமையாக பாதிக்கப்பட இருக்கிறது.

தங்களது மாத அடிப்படை சம்பளத்தில் 12 சதவீதத்தை தொழிலாளர்கள் வருங்கால வைப்புநிதிக்குச் செலுத்துகிறார்கள். தொழிலாளர்களின் எதிர்கால வாழ்வாதாரத்தை உறுதி செய்யும் வைப்புநிதிக்கான வட்டி விகிதத்தை மத்திய பாஜக அரசு குறைத்ததை விட தொழிலாளர் விரோத நடவடிக்கை வேறெதுவும் இருக்க முடியாது.

அதேபோல பொது வருங்கால வைப்புநிதி என்பது பல்வேறு சிறுசேமிப்புத் திட்டங்களில் செலுத்தப்பட்ட மொத்த தொகுப்பாகும். இதில் முதலீடு செய்தால் அதிக வட்டியும் பாதுகாப்பும் இருக்கும் என்ற நம்பிக்கையில் தான் இத்தகைய திட்டங்களில் மக்கள் முதலீடு செய்கிறார்கள்.

அந்த நம்பிக்கையைச் சீர்குலைத்து சிறுசேமிப்பு செய்கிற பழக்கத்தில் பின்னடைவு ஏற்படுகிற வகையில் செயல்பட்ட மத்திய பாஜக அரசை வன்மையாக கண்டிக்கிறேன். மேலும் கரோனா நோயினால் பாதிக்கப்பட்டு வருமானத்தை இழந்து வாங்கும் சக்தி இல்லாமல் இருக்கிற நிலையில் இத்தகைய அறிவிப்புகள் வெந்தபுண்ணில் வேல்பாய்ச்சுவதாகும்”.

இவ்வாறு கே.எஸ். அழகிரி தெரிவித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in