உதவிபெறும் பள்ளிச் செயலர்கள் கையெழுத்திட முடியாததால் ஆசிரியர்களுக்கு ஊதியம் கிடைப்பதில் சிக்கல்

உதவிபெறும் பள்ளிச் செயலர்கள் கையெழுத்திட முடியாததால் ஆசிரியர்களுக்கு ஊதியம் கிடைப்பதில் சிக்கல்
Updated on
1 min read

உதவிபெறும் பள்ளிச் செயலர்கள் கையெழுத்திட முடியாததால் பல பள்ளிகளில் ஆசிரியர்களுக்கு ஊதியம் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

உதவிபெறும் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள், பணியாளர்களின் ஊதிய பட்டியலில் பள்ளிச் செயலர்கள் கையெழுத்திட்டு, தொடர்ந்து கல்வி அலுவலர்கள் ஒப்புதல் அளிக்க வேண்டும்.

அதன்பிறகு ஊதியப்பட்டியல் கருவூலத்திற்கு அனுப்பப்பட்டு, ஆசிரியர்கள், பணியாளர்களின் வங்கி கணக்கில் ஊதியம் செலுத்தப்படும்.

பெரும்பாலான உதவி பெறும் பள்ளிகளின் செயலர்கள் வெளியூர்களில் உள்ளனர். அவர்கள் ஊதியப் பட்டியலில் கையெழுத்திடும் சமயங்களில் மட்டுமே பள்ளிகளுக்கு வருவர்.

அல்லது பள்ளி ஊழியர்கள் சென்று செயலரிடம் கையெழுத்து பெறுவர். தற்போது கரோனா வைரஸ் தொற்றை தடுக்க நாடு முழுவதும் 21 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது.

இதனால் பல பள்ளிகளில் ஊதியப் பட்டியலில் செயலர்களிடம் கையெழுத்து பெற முடியவில்லை. இதனால் பல பள்ளிகளில் ஆசிரியர்கள், பணியாளர்களுக்கு இந்த மாதம் ஊதியம் கிடைக்கவில்லை.

இதையடுத்து உதவிபெறும் பள்ளிகளில் தற்சமயம் செயலர்களுக்கு பதிலாக அரசு பள்ளிகளை போன்று தலைமைஆசிரியர்களிடம் கையொப்பம் பெற்று ஊதியம் வழங்க வேண்டுமென கோரிக்கை எழுந்துள்ளது.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in