

கன்னியாகுமரி மாவட்டத்தில் டெல்லி மத மாநாட்டிற்குச் சென்று வந்த 4 பேர் உட்பட 5 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
அவர்கள் வசித்த பகுதிகளுக்கு சீல் வைத்து கண்காணித்து வருகின்றனர். அவர்களுடன் தொடர்பில் உள்ள மேலும் 3 ஆயிரம் பேரை தனிமைப்படுத்தும் பணி நடந்து வருகிறது.
கன்னியாகுமரி மாவட்டத்தில் கரோனா தடுப்புப் பணி மும்முரமாக நடந்து வந்தது. ஆசாரிபள்ளம் அரசு மருத்துவகல்லூரி மருத்துவமனையில் உள்ள தொற்றுநோய், மற்றும் தனிமைப்படுத்தப்பட்ட பிரிவில் 71 பேர் கரோனா தொற்று சந்தேகத்தின் அடிப்படையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தனர்.
இதில் 7 பேர் மரணமடைந்தனர். ஆனால் அவர்களுக்கு கரோனா தொற்று இல்லை என்பது பரிசோதனையில் தெரியவந்தது. இதுவரை 58 பேர் பரிசோதனை செய்யப்பட்டதில் யாருக்கும் கரோனா பாதிப்பில்லை.
இந்நிலையில் நேற்று இரவு குமரி மாவட்டத்தை சேர்ந்த 5 பேருக்கு கரோனா தொற்று இருப்பது பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டது.
இதில் 4 பேர டெல்லியில் நடந்த மத கருத்தரங்கில் பங்கேற்றவர்கள். இதில் நாகர்கோவில் டென்னிசன்தெரு,, வெள்ளடிச்சிவிளையைச் சேர்ந்த இருவர், தேங்காய்பட்டணத்தைச் சேர்ந்த இருவர் அடங்குவர்.
மேலும் சென்னை விமான நிலையத்தில் வேலைபார்த்த மணிகட்டி பொட்டலை சேர்ந்த வாலிபரும் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார். இவர்கள் 5 பேருக்கும் ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனையில் உள்ள கரோனா வார்டில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
குமரி மாவட்டத்தில் இதுவரை கரோனா பாதிப்பில்லாத நிலையில் 5 பேருக்கு தொற்று ஏற்பட்டதால் மாவட்ட நிர்வாகம், சுகாதாரத்துறையினர் தடுப்பு நடவடிக்கைகளி முடுக்கிவிட்டுள்ளனர்.