

கரோனா வைரஸ் பரவலைத்தடுக்க, ‘‘மக்களே வெளியில் வருவதைத் தவிருங்கள்’’ என, மதுரை பெண் காவலர் மீனாட்சி வீடியோ மூலம் கெஞ்சி கேட்டுக்கொண்டுள்ளார்.
இந்த வைரஸ் தாக்குதலில் இருந்து மக்களைக் காப்பாற்ற இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. மதுரையில் அத்தியாவசியப் பொருட்களை வாங்குவோர் தவிர, சிலர் தேவையின்றி சாலையில் சுற்றுகின்றனர்.
அவர்களைப் போலீஸார் தடுத்து, எச்சரித்து அனுப்புகின்றனர். கரோனாவின் தாக்கம் குறித்தும், பரவலைத் தடுக்க முன்னெச்சரிக்கையாக இருப்பது பற்றியும் விழிப்புணர்வை ஏற்படுத்துகின்றனர். ஆனாலும், போலீஸாரின் எச்சரிக்கையை மீறி,ஊரடங்கு உத்தரவை மதிக்காமல் வெளியில் வருவோர் மீது நடவடிக்கை எடுக்கும் சூழலுக்கு தள்ளப்படுகின்றனர்.
கரோனாவில் இருந்து பாதுகாக்க எல்லோரும் வீட்டுக்குள் முடங்கி இருக்கும்போது, இரவு, பகல் பராமல் பணியில் இருக்கும் போலீஸாருக்கு ஒத்துழைப்பு தராமல் அவசியமின்றி வெளியில் வருவது, தெரு முனைகளில் சிலர் கூட்டமாக சந்திப்பது போன்ற செயல் போலீஸாரை சோர்வடையச் செய்கிறது.
பக்குவமாக எடுத்துச் சொல்லி கேட்காமலும், கரோனாவின் முக்கியத்துவம் தெரியாமலும் சிலர் ரோட்டில் சுற்றுகிறார்களே எனப் பணியிலுள்ள பெண் போலீஸார் ஆதங்கப்படுகின்றனர். போலீஸார் நடவடிக்கை எடுத்தால் அதை விமர்சனமும் செய்கிறார்களே என, மனநொந்துபோகும் சூழலுக்கு தள்ளப்படுகிறோம் என, மதுரை காவல்துறையினர் புலம்புகின்றனர்.
இது போன்ற சூழலில் மதுரை சுப்ரமணியபுரம் காவல் நிலையத்தில் பணிபுரியும் பெண் தலைமை காவலர் மீனாட்சி என்பவர் தனது குமுறலை வீடியோவாக பதிவிட்டு வெளியிட்டுள்ளார். அதில், ‘‘ உங்களுக்காக நாங்கள் வெளியில் வந்து இரவு, பகலாக வேலை செய்கிறோம். எங்களுக்கு ஒத்துழைப்பு தாருங்கள். பலர் ஒத்துழைப்பு செய்கிறீர்கள். இல்லை எனக் கூறவில்லை.
வீட்டுக்கு ஒருவர் வெளியில் வந்து தேவையான பொருட்கள் வாங்குங்கள். ஒரு வாரத்திற்கு வேண்டிய பொருட்களை வாங்கி வைத்துக் கொள்ளுங்கள். வெளியில் வந்தால் எல்லோரும் கஷ்டப்படு வோம். முதல்வர், பிரதமர், காவல்துறை உயரதிகாரிகள் தினமும் சிந்தித்து, பல்வேறு தடுப்பு நடவடிக்கை எடுக்கின்றனர். இதை புரிந்து கொள்ளுங்கள்.
வெளியில் வராமல் இருப்பதே வீட்டுக்கும், நாட்டுக்கும், குடும்பத்திற்கும் நல்லது. தேவையின்றி வெளியில் வருவோர் மீது நடவடிக்கை எடுத்தால் எங்களை விமர்சனம் செய்கின்றனர். அதைத்தாண்டி பணிபுரிகிறோம். ஒத்துழைக்காத மக்களை வேண்டி கேட்டுக்கொள்கிறேன். தயவு கூர்ந்து வீட்டுக்குள் இருங்கள்,’’ என, கண்ணீர் மல்க பதிவிட்டுள்ளார்.
இது சமூகவலைத்தளங்களில் வைராலாகிறது.