Published : 24 Mar 2020 01:41 PM
Last Updated : 24 Mar 2020 01:41 PM

சுங்கச்சாவடிகளில் வாகனங்களுக்கு கட்டணம் வசூல் செய்யக் கூடாது; வாசன் வலியுறுத்தல்

ஜி.கே.வாசன்: கோப்புப்படம்

சென்னை

சுங்கச்சாவடிகளில் வாகனங்களுக்கு கட்டணம் வசூல் செய்யாமல் அனுமதிக்க வேண்டும் என, தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக, ஜி.கே.வாசன் இன்று (மார்ச் 24) வெளியிட்ட அறிக்கையில், "தமிழகத்தில் கரோனா வைரஸால் இப்போது நிலவும் ஓர் அசாதாரண சூழலைக் கவனத்தில் கொண்டு சுங்கச்சாவடிகளில் கட்டணம் வசூல் செய்யாமல் வாகனங்களை அனுமதிக்க தமிழக அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அதாவது, தமிழகத்தில் இன்று மாலை முதல் 144 தடை உத்தரவு அமல்படுத்தப்பட உள்ள நிலையில், பேருந்துகளும் நிறுத்தப்பட உள்ளதால் பயணிகள் செல்லும் வாகனப் போக்குவரத்துக்கு சுங்கச்சாவடிகள் இடையூறாக அமைந்துவிடக் கூடாது.

ஏராளமான மக்கள் இன்றைக்கு ஊருக்குச் செல்வதால் போக்குவரத்துக்கான வாகனங்களின் எண்ணிக்கையும் அதிகரிக்கிறது.

அதாவது, அரசு மற்றும் தனியார் வாகனங்கள் அதிக எண்ணிக்கையில் இயக்கப்படுவதால் சுங்கச்சாவடிகளை கடந்து செல்வதற்கு காலநேரம் விரயமாகிறது. இதனால், போக்குவத்துக்கான நேரம் கூடுதலாவதோடு, பயணிகளும் சிரமத்திற்கு ஆளாகிறார்கள்.

மேலும், சுங்கச்சாவடிகளில் வாகனங்களுக்கு கட்டணம் வசூல் செய்யாமல் இருப்பதற்காக உயர் நீதிமன்றம் கேட்டுக்கொண்டதற்கு ஏற்ப அரசு பரிசீலனை செய்து சுங்கச்சாவடிகளில் வாகனங்களுக்கு கட்டணம் வசூல் செய்யப்படாமல் இருப்பதற்கான அறிவிப்பை உடனடியாக வெளியிட வேண்டும் என்று தமாகா சார்பில் கேட்டுக்கொள்கிறேன்" என ஜி.கே.வாசன் வலியுறுத்தியுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x