

தமிழகத்தில் 11-ம் வகுப்பு பொதுத்தேர்வை ரத்து செய்யவேண்டும் என எதிர்க்கட்சிகள், கல்வியாளர்கள் கோரி வந்த நிலையில் 144 தடையுத்தரவை அடுத்து அறிவிக்கப்பட்ட அறிவிப்பில் ரத்து செய்வதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இக்கட்டான சூழ்நிலையில் நாடே கரோனா வைரஸுக்கு எதிராக போராடிவரும் சூழலில் 11,12-ம் வகுப்பு தேர்வை நடத்தி எதை சாதிக்கப்போகிறீர்கள் என ஸ்டாலின், அன்புமணி ராமதாஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சித்தலைவர்கள் விமர்சித்திருந்த நிலையில் தற்போது பிளஸ் 1 தேர்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் பள்ளிக்கல்லூரிகள் விடுமுறை விடப்பட்டு, அனைத்து தேர்வுகளும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. நாடெங்கும் தனிமைப்படுதல் அமல்படுத்தப்பட்டு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு வருகிறது, போக்குவரத்து முற்றிலும் முடக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் தமிழக அரசு 11 மற்றும் 12-ம் வகுப்பு தேர்வை நடத்தியே தீருவோம் என பிடிவாதம் காட்டி வந்தது. பிளஸ்டூ தேர்வு முடியும் நிலையில் 11-ம் வகுப்பு தேர்வு இன்றுதான் தொடங்கியது. அதையும் ரத்து செய்யாத நிலையில் அரசு பிடிவாதம் பிடித்து வருவதாக எதிர்க்கட்சித்தலைவர்கள் விமர்சித்து வந்தனர்.
11 மற்றும் 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகளை மொத்தம் 20 லட்சம் பேர் எழுதுகின்றனர். அவர்களுக்கு துணையாக வரும் பெற்றோர், தேர்வுப்பணிகளில் ஈடுபட்டுள்ள ஆசிரியர்கள் உள்ளிட்ட பணியாளர் என இந்தத் தேர்வுகள் நடைபெறும் மையங்களில் மட்டும் சுமார் 50 லட்சம் பேர் கூடுவார்கள்.
இது கரோனா பரவுவதற்கே வழி வகுக்கும். அதுமட்டுமின்றி, ஒட்டுமொத்த உலகத்தையும் கரோனா வைரஸ் அச்சுறுத்தி வரும் வேளையில், கூட்டமாக தேர்வு எழுதுவது மாணவர்களுக்கு கடுமையான மன உளைச்சலை ஏற்படுத்தும். இது தேர்வுகளில் அவர்களின் செயல்பாட்டை பாதித்து, எதிர்கால வாய்ப்புகளை சீரழிக்கும் ஆபத்தும் உள்ளது என விமர்சித்திருந்தனர்.
24-ம் தேதி மாலை 6 மணிமுதல் 144 உத்தரவு அமல்படுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் மாலை தலைமைச் செயலர் சண்முகம் ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அதில் 11-ம் வகுப்பு தேர்வு ஒத்திவைக்கப்படுகிறது. 24 அன்று முடியும் 12-ம் வகுப்பு தேர்வு வழக்கம்போல் நடக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.