

கரோனா தடுப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மதுரை மத்திய சிறையில் இருந்து 56 விசாரணைக் கைதிகள் ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
இந்தியாவில் கரோனா தொற்றுக்கு பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 300-ஐ நெருங்கியுள்ளது. தமிழகத்தில் 6 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில், கரோனா தடுப்பு நடவடிக்கையாக கூட்டமாக மக்கள் இருப்பதைத் தவிர்க்கும் வகையில், மதுரை மத்திய சிறையில் 56 விசாரணைக் கைதிகள் ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
இதற்காக உயர் நீதிமன்ற நீதிபதி பிரகாஷ் தலைமையிலான 12 பேர் கொண்ட குழுவினர் மதுரை மத்தியச் சிறைக்குச் சென்றனர். அவர்களுடன் மதுரை மாநகர காவல் ஆணையர் டேவிட்சன் தேவாசீர்வாதம், மாவட்ட எஸ்.பி. மணிவண்ணன், சிறைத்துறை டிஐஜி பழனி, சிறைத்துறை எஸ்.பி. ஊர்மிளா ஆகியோரும் இருந்தனர்.
அவர்கள் விசாரணைக் கைதிகளின் வழக்குகளின் தன்மைகளை ஆராய்ந்து அதற்கேற்ப 56 பேருக்கு ஜாமீன் வழங்கி உத்தரவிட்டனர். ஜாமீன் வழங்கப்பட்டவர்கள் உடனடியாக விடுவிக்கப்பட்டனர்.