வெளிமாநில மொத்த வியாபாரிகள் வராததால் பயிரிடப்பட்ட தர்பூசணி தேக்கத்தால் விவசாயிகள் வேதனை

மொத்த வியாபாரிகள் வராததால் விளாகம் கிராமத்தில் அறுவடைக்கு தயாராக உள்ள தர்பூசணி பழங்கள் கொடியிலேயே தேக்கமடைந்துள்ளன.
மொத்த வியாபாரிகள் வராததால் விளாகம் கிராமத்தில் அறுவடைக்கு தயாராக உள்ள தர்பூசணி பழங்கள் கொடியிலேயே தேக்கமடைந்துள்ளன.
Updated on
1 min read

திருக்கழுக்குன்றம் ஒன்றியத்தில் உள்ள விளாகம், பாண்டூர், ஆயப்பாக்கம், வாயலூர், நெறும்பூர், பவூஞ்சூர் மற்றும்சூணாம்பேடு ஆகிய கிராமங்களில் வசிக்கும் விவசாயிகள், கோடைகாலங்களில் தர்பூசணி பயிரிடுவது வழக்கம். கடலோர கிராமங்களான இப்பகுதிகளில் விளைவிக்கப்படும் தர்பூசணிகளுக்கு கேரளா, கர்நாடகா மற்றும் ஆந்திர மாநிலங்களில் பெரியளவில் வர்த்தக வரவேற்பு உள்ளது. இதனால், அப்பகுதியைச் சேர்ந்த பழ வியாபாரிகள் இங்கு வந்து மொத்தமாக தர்பூசணிகளை வாங்கி செல்வர்.

இந்த ஆண்டும், கோடைக்காலத்தையொட்டி மேற்கண்ட பகுதியைச் சேர்ந்த விவசாயிகள், வெளிமாநில பழவியாபாரிகளை நம்பி ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஏக்கர் நிலங்களில் தர்பூசணி பழங்களைப் பயிரிட்டுள்ளனர். ஏக்கர்ஒன்றுக்கு ரூ.70 ஆயிரம் செலவிடப்பட்டு, சொட்டுநீர் பாசனம் மூலம் தர்பூசணி கொடிகள் வளர்க்கப்பட்டுள்ளன. தற்போது இக்கொடிகளில் தர்பூசணி அதிகளவில் காய்த்து, அறுவடைக்கு தயாராக உள்ளன.

இந்நிலையில், கேரளா மாநிலத்தில் கரோனா வைரஸ் பாதிப்பையொட்டி, அம்மாநிலத்தில் இருந்து தமிழகத்து வரும் அனைத்து வாகனங்களும் எல்லை பகுதியிலேயே தடுத்து நிறுத்தப்படுகின்றன. கர்நாடக மற்றும் ஆந்திர மாநிலங்களிலும் இதேநிலை உள்ளது.

இதனால், பழ வியாபாரிகள் தமிழகத்துக்குள் வர முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால், மேற்கண்ட பகுதிகளில் அறுவடைக்கு தயாராக உள்ள தர்பூசணிகளை விற்பனை செய்ய முடியமால் தேக்கமடைந்துள்ளதால், பெரியளவில் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து, திருக்கழுக்குன்றம் ஒன்றியத்தைச் சேர்ந்த விவசாயிகள் சிலர் கூறியதாவது:

வெளிமாநில பழ வியாபாரிகள் மொத்தமாக தர்பூசணியை வாங்கி சென்று சில்லரை விற்பனை செய்வது வழக்கம். இந்த ஆண்டு இப்பகுதிகளில் வழக்கத்தைவிட நல்ல மகசூல் கிடைத்துள்ள நிலையில், கரோனா வைரஸ் பாதிப்பு அச்சத்தால் தர்பூசணி பழங்களை வாங்க வெளிமாநில மொத்த வியாபாரிகள் வரவில்லை. இதனால், ஆயிரக்கணக்கான ஏக்கரில் பயிரிடப்பட்டு அறுவடைக்கு தயாராக உள்ள தர்பூசணி பழங்கள், அறுவடை செய்யப்படாமல் கொடியிலேயே தேங்கியுள்ளன.

மேலும், தர்பூசணி பழங்கள் அதிகளவில் தேக்கமடைந்துள்ளதால் உள்ளூரில் மிக குறைந்த விலையே கிடைக்கிறது என்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in