கரோனா வைரஸ் முன்னெச்சரிக்கை: ஹோட்டல், உணவகங்களுக்கு அதிகாரிகள் கட்டுப்பாடு

கரோனா வைரஸ் முன்னெச்சரிக்கை: ஹோட்டல், உணவகங்களுக்கு அதிகாரிகள் கட்டுப்பாடு
Updated on
1 min read

கரோனா வைரஸ் முன்னெச் சரிக்கை நடவடிக்கையாக, ஹோட்டல்கள், உணவகங் களுக்கு உணவுப் பாதுகாப்புத் துறை கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.

இதுதொடர்பாக உணவுப் பாதுகாப்புத் துறை மாவட்ட நியமன அலுவலர் டாக்டர் கு.தமிழ்ச் செல்வன் நேற்று கூறும்போது, ‘ஹோட்டல்கள், உணவகங்கள், தேநீர் கடைகளில் கரோனா வைரஸ் பரவாமல் தடுப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதன்படி, பொதுமக்கள் கைகழுவு வதற்கு தேவையான சோப்பு, திரவ சோப்புகளை வைத்திருக்க வேண்டும். மேலும், கரோனா வைரஸ் பரவும் முறைகள், அறிகுறிகள் குறித்த அறிவிப்பு பலகைகளை உணவகத்தின் நுழைவுவாயில் முன்பும், கை கழுவும் இடத்திலும் அவசியம் காட்சிப்படுத்த வேண்டும்.

சமைக்கும் உணவுகளை வேகவைத்தும், சூடாகவும் பரிமாற வேண்டும். சளி, இருமல், காய்ச்சல் உள்ளவர்கள் பணியில் இருக்கக்கூடாது. தங்கும் வசதியுள்ள ஹோட்டல்களுக்கு வரக்கூடிய வெளிநாட்டவர், வெளி மாநிலத்தவர்களின் விவரங்களை தெரியப்படுத்த, வாட்ஸ்-அப் குழு தொடங்கப்பட்டுள்ளது. இதில், தினசரி ஹோட்டல்களில் இருந்து தகவல் பெறப்பட்டு, அந்த அறிக்கை சுகாதாரத் துறைக்கு அளிக்கப்பட்டு வருகிறது.

தமிழக - கேரள எல்லையான வாளையாறு, பொள்ளாச்சி, வால்பாறை, ஆனைகட்டி பகுதிகளிலுள்ள ஹோட்டல்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது' என்றார்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in