

மதுரை காமராஜர் பல்கலைக்கழக துணைவேந்தருக்கு பிரதமர் மோடி உருவப்படத்துடன் கூடிய போலி ட்விட்டர் கணக்கில் இருந்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது தொடர்பாக காவல்துறையில் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்த ட்விட்டர் கணக்கில், "காமராஜர் பல்கலைக்கழகத்தை மூடுமாறு துணைவேந்தருக்கு வேண்டுகோள் விடுக்கிறேன். காமராஜர் பல்கலைக்கழகம் நாட்டின் தலைசிறந்த பல்கலைக்கழகம். அதன் சிறப்புமிகு மாணவர்களின் உடல்நலனை அச்சுறுத்தலுக்கு உள்ளாக்க இயலாது" எனக் குறிப்பிடப் பட்டுள்ளது.
கரோனா பாதிப்பு காரணமாக நாடு முழுவதும் கல்வி நிறுவனங்களுக்கு வரும் மார்ச் 31 வரை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்திற்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில், மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தாலுகா . மதுரை காமராஜர் பல்கலை கழக துணை வேந்தருக்கு பிரதமர் நரேந்திர மோடி பெயரில் போலியான உத்தரவு போலி ட்விட்டர் கணக்கில் இருந்து வந்துள்ளது.
இது தொடர்பாக பல்கலைக்கழக பதிவாளர் சங்கர் (பொறுப்பு ) அளித்த புகாரின் பேரில் நாகமலை புதுக்கோட்டை போலீஸார் 3 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
கரோனா வைரஸ் குறித்து வதந்திகளை பரப்புவோர் மீது காவல்துறை மூலம் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ள நிலையில், பிரதமர் மோடி பெயரிலேயே போலி ட்விட்டர் மூலம் ஒரு பல்கலைக்கழக துணைவேந்தருக்கு போலி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கரோனா குறித்து வதந்தி பரப்புவோர் மீது நடவடிக்கை எடுக்க மதுரை மாவட்ட எஸ்.பி. மணிவண்ணன் அறிவுறுத்தியுள்ளார். அதன்படி மதுரையில் காவல் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது.
7708806111 என்ற எண்ணில் மக்கள் தங்களின் புகார்களைத் தெரிவிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.