இ-வாரண்டை, இ-பீட் உடன் இணைத்து நவீனத்தை புகுத்திய சிவகங்கை எஸ்பி: மத்திய உள்துறை விருது பெறுகிறார்

இ-வாரண்டை, இ-பீட் உடன் இணைத்து நவீனத்தை புகுத்திய சிவகங்கை எஸ்பி: மத்திய உள்துறை விருது பெறுகிறார்
Updated on
1 min read

இ-வாரண்ட், இ-சம்மனை இ-பீட் உடன் இணைத்து நவீனத்தை புகுத்திய சிவகங்கை எஸ்பி ரோஹித்நாதனுக்கு விருது கிடைத்துள்ளது.

குற்றங்களைத் தடுக்க போலீஸார் இரவு ரோந்துப் பணியில் ஈடுபடுகின்றனர். அவர்களைக் கண்காணிக்க குறிப்பிட்ட இடங்களில் வைக்கப்பட்டிருக்கும் பட்டா புக்குகளில், அவர்கள் கையெழுத்திட வேண்டும். மேலும் உயரதிகாரிகள் அவ்வப்போது பட்டா புக்குகளை ஆய்வு செய்வர். இதில் போலீஸார் சிலர் ரோந்து பணியில் ஈடுபடாமலேயே ஏமாற்றி வந்தனர்.

இதைத் தடுக்கும் வகையில் சிவகங்கை எஸ்.பி. ரோஹித் நாதன் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் சிவகங்கை மாவட்டத்தில் ‘இ-பீட்’ செயலியை அறிமுகப்படுத்தினார். பீட் உள்ள இடங்களில் கியூ ஆர் கோடு வைக்கப்படும். அதை ஒருமுறை போலீஸார் மொபைலில் ஸ்கேன் செய்து கொள்ள வேண்டும். அதன்பின் அந்த கியூ ஆர் கோடு இருக்கும் பகுதிக்கு (10 மீட்டருக்குள்) சென்றாலே அந்த போலீஸார் அங்கு சென்றதாக குறியீடு காட்டும். ஒரு பீட்டில் இருந்து மற்றொரு பீட்டிருக்கு 10 நிமிடங்களுக்கு பின்பே செல்ல வேண்டும்.இதனை உயரதிகாரிகளும் இருந்த இடத்தில் இருந்தே கண்காணிக்க முடியும்.

மேலும் அவர்கள் உத்தரவுகளையும் பிறபிக்க முடியும். இந்த செயலியால் ரோந்து போலீஸார் இருக்கும் இடத்தை உடனுக்குடன் கண்டறிந்து, வேறு இடங்களுக்கு உடனடியாக செல்ல உத்தரவிட முடியும்.

இதுதவிர ரோந்தில் இருக்கும் ஒரு காவலருக்கு மட்டும் போலீஸ் அதிகாரி உத்தரவிடும் வகையில் ஒன் - டூ முறை செயலியும் சிவகங்கை மாவட்டத்தில் அறிமுகப்படுத்தினார்.

தொடர்ந்து நீதிமன்ற இ-வாரண்ட், இ-சம்மனையும், இ-பீட் உடன் இணைத்து ரோந்து போலீஸார் மூலம் உடனுக்குடன் குற்றவாளிகளுக்கும், சாட்சிகளுக்கும் கிடைக்கும் வகையில் நடவடிக்கை எடுத்தார்.

குற்றங்களைத் தடுக்க அவர் புகுத்திய நவீன முறை தேசிய அளவில் 2-ம் இடம் பிடித்தது.

இதையடுத்து அவருக்கு மார்ச் 12-ம் தேதி புதுடெல்லியில் மத்திய உள்துறை அமைச்சகம் சார்பில் விருது வழங்கப்பட உள்ளது. எஸ்பியை ரோகித்நாதனை சிவகங்கை போலீஸார் பாராட்டியுள்ளனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in