கடந்த 13 ஆண்டுகளாக கருணை அடிப்படை பணிக்காக காத்திருக்கும் காவலர் வாரிசுகள்

கடந்த 13 ஆண்டுகளாக கருணை அடிப்படை பணிக்காக காத்திருக்கும் காவலர் வாரிசுகள்
Updated on
1 min read

தமிழகம் முழுவதும் கருணை அடிப்படையில் பணி நியமனத்தை எதிர்பார்த்து காவலர்களின் வாரிசுகள் சுமார் 2,400 பேர் கடந்த 13 ஆண்டு களாக காத்திருக்கின்றனர்.

தமிழகம் முழுவதும் சுமார் 1 லட்சத்துக்கும் அதிகமான காவலர்கள் பணியாற்றி வருகின்றனர்.

தமிழ்நாடு காவல் துறையில் 2-ம் நிலை காவலர் முதல் அதிகாரிகள் வரை பணியின்போது இறப்பு நேர்ந்தால், அவர்களது வாரிசுகளுக்கு தமிழ்நாடு காவல் துறை அமைச்சுப் பணிகளில் பணி வழங்குவது நடைமுறையில் இருந்து வருகிறது.

ஆனால், கடந்த 2002-ல் இறந்த காவலர்களின் வாரிசுகளுக்கு இதுவரை பணி நியமன ஆணை வழங்கப்படாமல் காத்திருப்புப் பட்டியலில் வைக்கப்பட்டுள்ளனர். மேலும், தற்போது வரை காவல் துறையில் பணியாற்றி உயிரிழந்தவர்களின் வாரிசுகள் சுமார் 2,400 பேர் கருணை அடிப்படையில் வேலை வேண்டி காத்திருப்போர் பட்டியலில் உள்ளனர்.

இது குறித்து காவல் துறை அமைச்சுப் பணியாளர் சங்க மாநில பொதுச் செயலர் முத்து கூறியது:

பணி நியமனம் தொடர்பாக தமிழக அரசு தற்போது சில அறிவுரைகள் வழங்கியுள்ளது. அதன்படி விகிதாச்சார அடிப்படையில் 20 சதவீதம், கருணை அடிப்படையில் 60 சதவீதம், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மற்றும் கீழ்நிலை பதவிகளில் இருந்து பதவி உயர்வு பெறுவோர் 20 சதவீதம் எனப் பிரித்து பணி நியமனம் செய்யப்படுகின்றனர்.

இதனால், கருணை அடிப்படையில் காவல் துறையில் பணி நியமனம் பெறுவதில் தேக்க நிலை ஏற்பட்டுள் ளது.

கருணை அடிப்படையில் பணி நியமனம் வேண்டி காத்திருப்போர் பட்டியலில் உள்ளவர்களின் நலன் காக்கும் வகையில் காவல் துறை அமைச்சுப் பணிக்கு விலக்கு அளிக்க வேண்டும். அப்போதுதான் காவலர்களின் வாரிசுகளுக்கு விடிவு பிறக்கும் என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in