

திருப்பூரில் சிஏஏவுக்கு எதிராக அனுமதியின்றி போராட்டம் நடத்துபவர்களைக் கைது செய்ய வேண்டும் என்று காவல்துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
கடந்த 14ம் தேதி முதல் பல்வேறு இடங்களில் குடியுரிமைத் திருத்தச் சட்டத்தை எதிர்த்து போராட்டம் நடைபெற்று வருகின்றன. குறிப்பாக திருப்பூரில் நடைபெற்ற போராட்டங்களினால் பள்ளிக்குச் செல்லும் குழந்தைகள், வேலைக்குச் செல்வோர்கள் பாதிக்கப்பட்டனர்.
ஆகவே சட்டவிரோதமாக அனுமதியின்றி திடீர் போராட்டத்தில் ஈடுபட்டவர்களைக் கண்டித்து கோபிநாத் என்ற வழக்கறிஞர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கு வியாழனான இன்று நீதிபதிகள் சுந்தரேஷ் மற்றும் கிருஷ்ணன் ராமசாமி ஆகியோர் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழகம் சார்பாக ஆஜரான வழக்கறிஞர் கூறும்போது, இது தொடர்பாக 20 வழக்குகள் தொடரப்பட்டுள்ளன, அதாவது ஆதரவு போராட்டங்கள் நடத்தியவர்களுக்கு எதிரான வழக்கையும் சேர்த்து மொத்தம் 20 வழக்குகள்., குற்றப்பத்திரிகைகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன என்று தெரிவித்தார்.
இதனையடுத்து நீதிபதிகள் குற்றப்பத்திரிகைகள் தாக்கல் செய்யப்பட்ட பிறகு கைது நடவடிக்கையை எது தடுக்கிறது என்று கேள்வி எழுப்பிய நீதிபதிகள் அனுமதியின்றி போராட்டம் நடத்துபவர்களை அப்புறப்படுத்துங்கள், கைது செய்யுங்கள் என்று காவல்துறைக்கு உத்தரவிட்டனர்.
இந்த உத்தரவின் தன்மை திருப்பூர் வழக்குக்கு மட்டும் பொருந்துமா அல்லது தமிழகம் முழுவதற்கும் பொருந்துமா என்பது இனிமேல்தான் தெரியவரும்.