

புதுச்சேரி அரசைக் கண்டித்து பாஜகவினர் சட்டப்பேரவையை முற்றுகையிட முயன்றனர்.
புதுச்சேரியில் முதல்வர் நாராயணசாமி தலைமையிலான காங்கிரஸ் அரசு தேர்தல் வாக்குறுதிகள் ஒன்றை கூட நிறைவேற்றவில்லை எனவும், நிர்வாகத்தில் நடைபெறும் ஊழல், சீர்கேடு உள்ளிட்டவைகளால் தொழில் முனைவோர் மற்றும் வியாபாரிகளின் வாழ்வாதாரம் முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது எனவும், புதுச்சேரி பாஜகவினர் தொடர்ந்து குற்றம்சாட்டி வருகின்றனர்.
இந்நிலையில், குடிநீர், மின்சாரம், குப்பை உள்ளிட்டவற்றின் வரிகளை உயர்த்தியதைக் கண்டித்தும், சென்னை உயர் நீதிமன்றமே அரசிக்கு பதிலாக பணமாக வழங்க உத்ததரவிட்டுள்ளதால் 23 மாத நிலுவை பணத்தை உனடியாக வழங்க வேண்டும் என்பதை வலியுறுத்தியும் பாஜக சார்பில் சட்டப்பேரவை முற்றுகையிடும் போராட்டம் அறிவிக்கப்பட்டது.
அதன்படி இன்று (மார்ச் 3) பாஜக மாநில தலைவர் சாமிநாதன் எம்எல்ஏ தலைமையில், மாநில துணைத் தலைவர் செல்வம், பொதுச் செயலாளர் தங்க விக்ரமன் உள்ளிட்ட அக்கட்சியைச் சேர்ந்த 100-க்கும் மேற்பட்டோர் மிஷன் வீதியில் உள்ள ஜென்மராக்கினி கோயில் அருகே கூடினர்.
தொடர்ந்து அவர்கள் அரசுக்கும் எதிராகவும், அரிசிக்கான பணத்தை உடனடியாக வங்கி கணக்கில் செலுத்த வலியுறுத்தியும் கோஷமிட்டனர். தொடர்ந்து அவர்கள் அங்கிருந்து சட்டப்பேரவையை முற்றுகையிட முயன்றனர். அவர்களை சட்டப்பேரவை அருகிலேயே போலீஸார் சாலையின் குறுக்கே தடுப்புகளை போட்டு தடுத்து நிறுத்தினர்.
இதையடுத்து அங்கு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பாஜகவினர் அங்கிருந்து கலைந்து சென்றனர்.