ராமநாதபுரத்தில் புதிய அரசு மருத்துவக்கல்லூரி: முதல்வர் பழனிசாமி அடிக்கல் நாட்டினார்

ராமநாதபுரத்தில் புதிய அரசு மருத்துவக்கல்லூரி: முதல்வர் பழனிசாமி அடிக்கல் நாட்டினார்
Updated on
2 min read

ராமநாதபுரத்தில் புதிய அரசு மருத்துவக்கல்லூரிக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி அடிக்கல் நாட்டினார்.

தமிழகத்தில் ராமநாதபுரம், விருதுநகர், திண்டுக்கல், நாமக்கல், திருப்பூர், உதகை, திருவள்ளூர், கிருஷ்ணகிரி, நாகப்பட்டினம், அரியலூர், கள்ளக்குறிச்சி ஆகிய 11 இடங்களில் மருத்துவக் கல்லூரிகள் அமைக்க மத்திய அரசு ஒப்புதல் வழங்கி உள்ளது.

ராமநாதபுரத்தில் பட்டினம்காத்தான் அம்மா பூங்கா அருகே ரூ.345 கோடியில் அரசு மருத்துவக் கல்லூரி அமைக்கப்படுகிறது. இங்கு கட்டிடங்கள் கட்டுவதற்காக 22.6 ஏக்கர் நிலம் ஒதுக்கப்பட்டுள்ளது. மருத்துவக் கல்லூரி கட்டுவதற்காக அடிக்கல் நாட்டு விழா அம்மா பூங்கா அருகே உள்ள திடலில் இன்று (மார்ச் 1) காலை 10 மணி அளவில் நடைபெற்றது.

விழாவுக்கு மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலம், அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் மற்றும் புவி அறிவியல் துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன் தலைமை வகித்தார். துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் முன்னிலை வகித்தார். முதல்வர் பழனிசாமி அரசு மருத்துவக் கல்லூரிக்கான அடிக்கல் நாட்டினார்.

மேலும் மத்திய அரசின் தீனதயாள் அந்தியோதயா யோஜனா திட்டத்தில் ரூ.45 லட்சத்தில் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை வளாகத்தில் ராமநாதபுரம் நகராட்சி சார்பில் அமைக்கப்பட்டுள்ள நோயாளிகளின் உதவியாளா்கள் தங்கும் மையம், பரமக்குடியில் ரூ.1.2 கோடி மதிப்பில் அமைக்கப்பட்டுள்ள தாய்-சேய் நல சிகிச்சை மையம், கீழத்தூவலில் மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையம் உட்பட 5 புதிய கட்டிடங்களைத் திறந்து வைத்து நலத்திட்ட உதவிகளையும் எடப்பாடி பழனிசாமி வழங்கினார்.

முன்னதாக மருத்துவக் கல்லூரி அடிக்கல் நாட்டு விழாவிற்கு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி காலை 7 20 மணிக்கு விமானம் மூலம் சென்னையில் இருந்து மதுரை வந்தடைந்தார்.

முதல்வரை மதுரை மாவட்ட ஆட்சியர் TG. வினய், மதுரை மாநகராட்சி ஆணையர் விசாகன் மற்றும் . அமைச்சர்கள் செல்லூர் ராஜூ, உதயகுமார், ராஜன் செல்லப்பா, பெரிய புள்ளான், சரவணன் ஆகியோர் வரவேற்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in