பழநியில் தைப்பூசத் திருவிழா முடிந்தும் பக்தர்கள் வருகை குறையவில்லை: பறவை காவடி எடுத்துவந்து வியக்கவைத்த வால்பாறை பக்தர்கள்

பழநியில் தைப்பூசத் திருவிழா முடிந்தும் பக்தர்கள் வருகை குறையவில்லை: பறவை காவடி எடுத்துவந்து வியக்கவைத்த வால்பாறை பக்தர்கள்
Updated on
1 min read

பழநியில் அந்தரத்தில் தொங்கியபடி பறவை காவடி எடுத்து வந்த கோவை மாவட்டம் வால்பாறையைச் சேர்ந்த பக்தர்கள் தங்கள் நேர்த்திக்கடனை செலுத்தினர்.

தைப்பூசத் திருவிழா முடிந்தபிறகும் கூட பழநிக்கு பக்தர்கள் வருகை குறையாமல் உள்ளது.

திண்டுக்கல் மாவட்டம் பழநியில் பிரசித்தி பெற்ற தைப்பூசத் திருவிழா, கடந்த பிப்.2-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி 10 நாட்கள் நடைபெற்றது. விழாவின் முக்கியநிகழ்வான தேரோட்டம் பிப்ரவரி 8-ம் தேதி நடைபெற்றது.

லட்சக்கணக்கான பக்தர்கள் தைப்பூச விழாவில் தண்டாயுதபாணிசுவாமியை தரிசனம் செய்தனர். இந்நிலையில் தைப்பூசவிழா முடிந்தபிறகும் பழநிக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை குறையவில்லை.

நாள்தோறும் ஆயிரக்கணக்கானோர் பழநி மலைக்கோயில் சென்று சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர். கோவை மாவட்டம் வால்பாறையைச் சேர்ந்த பக்தர்கள் இன்று பழநி அடிவாரம் பகுதியில் பறவை காவடி எடுத்தனர்.

முன்னதாக பழநி சண்முகநதியில் நீராடிய இவர்கள் அலகு குத்தி அந்தரத்தில் தொங்கியபடி பிரமாண்டமான முறையில் பறவை காவடி எடுத்தனர். கிரி வீதிகளில் வலம்வந்து பாதவிநாயகர் கோயிலில் தங்கள் நேர்த்திக்கடனைச் செலுத்தினர். வால்பாறை பக்தர்கள் ராட்சதகிரேன் உதவியுடன் பறவை காவடி எடுத்து தொங்கிக்கொண்டு வந்ததை பழநிக்கு வந்த மற்ற பக்தர்கள் ஆச்சரியத்துடன் பார்த்தனர்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in