

ரூபாய் நான்கரை லட்சம் கோடி கடன் தொடர்பாக தமிழக அரசு தான் பதிலளிக்க வேண்டும் என, விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
கோவை விமான நிலையத்தில் நேற்று (பிப்.24) செய்தியாளர்களிடம் பேசிய முதல்வர் எடப்பாடி பழனிசாமி, திமுக ஆட்சியில் இருந்த 1 லட்சம் கோடி கடனுக்குத் தமிழக அரசு தற்போது வரை வட்டி செலுத்தி வருவதாக, திமுக மீது குற்றம்சாட்டியிருந்தார்.
இந்நிலையில், இதுதொடர்பாக, சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களின் கேள்விக்குப் பதிலளித்த விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன், "இன்றைக்குத் தமிழக அரசு நான்கரை லட்சம் கோடி கடன் பட்டிருக்கிறது. அந்தக் கடன் திருப்பி அடைக்கப்பட வேண்டிய ஒன்று. மக்களை கடனாளிகளாக இல்லாத நிலையிலே வைத்திருக்க வேண்டிய பொறுப்பு, இன்றைக்கு ஆட்சியில் இருக்கக்கூடிய ஆளும்கட்சிக்குத் தான் இருக்கிறது.
எதிர்க்கட்சிகளின் மீது பழியைப் போட்டு ஆளும்கட்சி தப்பிக்கக் கூடாது. ஆளுங்கட்சியின் மீது பழி போடுவது எதிர்க்கட்சிகளின் வேலையென்று பொதுமக்கள் பார்க்க மாட்டார்கள். ஆட்சியில் இருக்கும் அதிமுக இதற்கு பொறுப்பேற்க வேண்டும். பதில் சொல்ல வேண்டும்" என தெரிவித்தார்.