இந்தியன்-2 படப்பிடிப்பில் விபத்து- விசாரணை அதிகாரி நியமனம்

இந்தியன்-2 படப்பிடிப்பில் விபத்து- விசாரணை அதிகாரி நியமனம்

Published on

இந்தியன்-2 படப்பிடிப்பின்போது ஏற்பட்ட விபத்தில் 3 பேர் உயிரிழந்தனர். இந்த வழக்கின் விசாரணை அதிகாரியாக மத்திய குற்றப்பிரிவு துணை ஆணையர் நாகஜோதி நியமிக்கப்பட்டுள்ளார்.

சென்னை, பூந்தமல்லி அருகே நசரத்பேட்டையை அடுத்துள்ள செம்பரம்பாக்கத்தில் செயல்பட்டு வரும் ‘ஈவிபி’ பிலிம் சிட்டியில், நடிகர் கமல்ஹாசன் நடித்து வரும் இந்தியன்-2 திரைப்படத்தின் படப்பிடிப்பு நடைபெற்றது. கடந்த 19-ம் தேதி இரவு நடைபெற்ற படப்பிடிப்பின் போது, விபத்து ஏற்பட்டது. இதில், 3 பேர் உயிரிழந்தனர். 10-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். இந்த விபத்து தொடர்பாக நசரத்பேட்டை போலீஸார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.

இந்நிலையில் இந்த வழக்கு விசாரணை சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீஸாருக்கு மாற்றி சென்னை காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் கடந்த வெள்ளிக்கிழமை உத்தரவிட்டார். இதைத் தொடர்ந்து இரவோடு இரவாக வழக்கு மாற்றப்பட்டது.

பெரிய தயாரிப்பு நிறுவனம், பிரபலமான இயக்குநர் மற்றும் நடிகர், நடிகைகள் சம்பந்தப்பட்டிருப்பதால் வழக்கின் முக்கியத்துவம் கருதி இந்த வழக்கு சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீஸாருக்கு மாற்றப்பட்டதாக போலீஸ் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது. இந்நிலையில், இந்த வழக்கின் விசாரணை அதி காரியாக மத்திய குற்றப்பிரிவு துணை ஆணையர் ஜி.நாகஜோதி (சிசிபி - 1) நியமிக்கப்பட்டுள்ளார்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in