கடத்தலுக்கு உடந்தையாக இருந்த சென்னை சுங்கத்துறை அதிகாரிகள் 2 பேர் கைது- ரூ.5.5 கோடி தங்கம் பறிமுதல்

கோப்புப் படம்
கோப்புப் படம்
Updated on
1 min read

தங்கக் கடத்தலுக்கு உடந்தையாக இருந்ததாக சுங்கத் துறை அதிகாரிகள் 2 பேரை மத்திய வருவாய் புலனாய்வு அதிகாரிகள் கைது செய்துள்ளனர். கடத்தல் குருவிகளிடம் இருந்து ரூ.5.5 கோடி மதிப்பிலான தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

சில நாட்களுக்கு முன்பு மலேசியா, இலங்கை, துபாயில் இருந்து வந்த பயணிகள், சென்னை விமான நிலையத்தில் சுங்கச் சோதனைகளை முடித்துவிட்டு வெளியே வந்தனர். அப்போது, மத்திய வருவாய் புலனாய்வு பிரிவு (டிஆர்ஐ) அதிகாரிகள் அந்த பயணிகளிடம் மீண்டும் சோதனை நடத்தினர்.

அதில் 13 பயணிகளிடம் இருந்து பல கோடி ரூபாய் மதிப்பிலான தங்கக் கட்டிகள், பல லட்சம் ரூபாய் மதிப்பிலான எலெக்ட்ரானிக் பொருட்கள் கைப்பற்றப்பட்டன. அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடத்தியதில், அவர்கள் அனைவரும் கடத்தல் குருவிகள் என்றும், பல்வேறு நாடுகளில் இருந்து தொடர்ச்சியாக தங்கம் உள்ளிட்ட பொருட்களை கடத்தி வருபவர்கள் என்றும் தெரியவந்தது.

சுங்கத் துறையில் உள்ள சிலரின் ஒத்துழைப்போடுதான் கடத்தல் பொருட்கள் வெளியே சென்றிருப்பது உறுதிசெய்யப்பட்டது.

அதிகாரிகளிடம் விசாரணை

இதையடுத்து, கடத்தல்காரர்கள் நகை, பொருட்களுடன் தப்புவதற்கு உதவியது தொடர்பாக 5 சுங்கத் துறை அதிகாரிகளிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டது.

இதில் 2 அதிகாரிகள் கடத்தல்காரர்களுக்கு உடந்தையாக இருந்தது தெரியவந்தது. இதைத் தொடர்ந்து, 2 சுங்கத் துறை அதிகாரிகளையும் டிஆர்ஐ அதிகாரிகள் கைது செய்தனர்.

இவர்களது உதவியுடன் சுங்கச் சோதனையில் இருந்து தப்பி, வெளியே எடுத்துச் செல்ல முயன்ற ரூ.5.5 கோடி மதிப்பிலான 12.6 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. அனைவரிடமும் தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in