Published : 15 Feb 2020 12:26 PM
Last Updated : 15 Feb 2020 12:26 PM

சிஏஏ, என்ஆர்சி, என்பிஆர் ஆகியவற்றைத் திரும்பப் பெறுக: மதிமுக உயர்நிலைக்குழு கூட்டத்தில் தீர்மானம்

மதிமுகவின் உயர்நிலைக்குழு, மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் இன்று (பிப்.15) காலை, சென்னை, தாயகத்தில் மதிமுக அவைத் தலைவர் திருப்பூர் சு.துரைசாமி தலைமயில் நடைபெற்றது.

கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:

தீர்மானம் 1:

மத்திய அரசின் இணைச் செயலாளர்கள் பதவிக்கு இட ஒதுக்கீடு தேவை இல்லை என்ற ஆணை, மருத்துவப் படிப்பில் அகில இந்திய ஒதுக்கீட்டில் மாநில அரசின் மருத்துவக் கல்லூரிகளிலிருந்து பெறப்படும் இடங்களில் பிற்படுத்தப்பட்ட சமூகத்தினருக்கு இட ஒதுக்கீடு வழங்க மறுப்பு, நீட் மற்றும் 'நெக்ஸ்ட்' தேர்வைக் கட்டாயமாக்கி, கிராமப்புற ஏழை பிற்படுத்தப்பட்ட, பட்டியலினத்தைச் சார்ந்தோர் மருத்துவப் படிப்பில் சேர முடியாமல் தடுப்பு போன்ற நடவடிக்கைகள் பாஜக அரசின் சமூக நீதிக்கு எதிரான போக்குகள் தொடருவதும், உச்ச நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பும் எதிர்காலத்தில் அரசமைப்புச் சட்டம் வழங்கிய பிற்படுத்தப்பட்டோர், பட்டியல் இன மக்களின் உரிமைகளை முற்றாகப் பறிகொடுக்கும் நிலைமையை உருவாக்கிவிடும்.

இந்த பேராபத்துகளைத் தடுத்து நிறுத்த, போராட்டங்களை முன்னெடுக்க வேண்டும் என்று பிப்ரவரி 13 ஆம் தேதி பெரியார் திடலில், திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி தலைமையில் கூடிய அனைத்துக் கட்சிக் கூட்டம் விடுத்துள்ள அறைகூவல் தீர்மானத்தைச் செயல்படுத்த மதிமுக எல்லா வகையிலும் உறுதுணையாக இருக்கும். சமூக நீதிக்கான போராட்டங்களில் எப்போதும் போல மதிமுகவின் பங்களிப்பு இருக்கும் என்று இக்கூட்டம் உறுதியளிக்கிறது.

தீர்மானம் 2:

சிஏஏ, என்ஆர்சி, என்பிஆர் சட்டங்களைத் திரும்பப் பெற வேண்டும்.

தீர்மானம் 3:

ஹைட்ரோகார்பன் திட்டங்களுக்கு மத்திய அரசு போட்டுள்ள புரிந்துணர்வு ஒப்பந்தங்களையும், பெட்ரோலிய ரசாயன முதலீட்டு மண்டலம் அமைக்க 2017 ஜூiலை 19-ல் வெளியிடப்பட்ட குறிப்பாணையையும் ரத்து செய்வதற்கு உரிய நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொள்ள வேண்டும்.

தீர்மானம் 4:

காலதாமதம் இன்றி உடனடியாக நகர்ப்புற உள்ளாட்சி மற்றும் விடுபட்ட 9 மாவட்டங்களுக்கும் உள்ளாட்சித் தேர்தல் தேதியை மாநில தேர்தல் ஆணையம் வெளியிட வேண்டும்.

தீர்மானம் 5:

ரயில்வே துறையைத் தனியார்மயமாக்குவது மக்கள் சேவை வணிகமயம் ஆவது மட்டுமின்றி, ஒட்டுமொத்த வளர்ச்சி முன்னேற்றத்தையும் பாதிக்கும். இதனைக் கருத்தில் கொண்டு ரயில்வே துறையைத் தனியார் மயமாக்கும் நடவடிக்கைகளை நிறுத்த வேண்டும்.

தீர்மானம் 6:

டிஎன்பிஎஸ்சி முறைகேடுகள் குறித்து நியாயமான விசாரணை நடத்திட சிபிஐயிடம் இந்த வழக்கை ஒப்படைக்க வேண்டும்.

தீர்மானம் 7:

குடியுரிமைத் திருத்தச் சட்டத்திற்கு எதிராக சாதி, சமய வேறுபாடின்றி போராடி வரும் அனைத்துத் தரப்பு மக்கள் மீதும் காவல் துறை தாக்குதல் நடத்துவது கடும் கண்டனத்துக்கு உரியதாகும். இந்த நிலை தொடர்ந்தால், தமிழகம் அமைதிப் பூங்காவாகத் திகழும் தமிழகம் நாள்தோறும் போராட்டக் களத்தைச் சந்திக்க வேண்டியது இருக்கும் என்று மதிமுக சுட்டிக்காட்டுகிறது.

இந்த 7 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

தவறவிடாதீர்!

நாடு முழுவதும் சிபிஎஸ்இ தேர்வுகள் இன்று தொடங்கின

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x