Published : 15 Feb 2020 11:23 AM
Last Updated : 15 Feb 2020 11:23 AM

இனி குரூப் 2ஏ, குரூப் 4-க்கு இரு தேர்வுகள்; விடைத்தாள் பாதுகாப்புக்கு ஜிபிஎஸ், கேமரா வசதி: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு

இனி குரூப் 2ஏ, குரூப் 4ஆகியவற்றுக்கு இரு தேர்வுகள் நடத்தப்படும், தேர்வர்களின் கைரேகை கட்டாயம் உள்ளிட்ட சில மாற்றங்களை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ளது.

அண்மையில் குரூப் 2ஏ, குரூப் 4 ஆகிய தேர்வுகளில் முறைகேடுகள் நடந்தது உறுதி செய்யப்பட்டதை அடுத்து, டிஎன்பிஎஸ்சி 99 பேருக்கு வாழ்நாள் தடை விதித்தது. அதேபோல தேர்வுக்கு ஆதார் கட்டாயம் உள்ளிட்ட மாற்றங்களை அறிமுகப்படுத்தியது.

இந்நிலையில் தற்போது மேலும் சில மாற்றங்களை டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது.

''முதனிலை மற்றும் முதன்மைத் தேர்வு அறிமுகம்
குரூப் 2ஏ மற்றும் குரூப் 4 ஆகிய தேர்வுகளுக்கு இனி முதனிலை மற்றும் முதன்மைத் தேர்வு என இரு தேர்வுகள் அறிமுகம் செய்யப்படுகின்றன.

தேர்வு நேரங்களில் மாற்றம்
தேர்வு சரியாக காலை 10 மணி முதல் 1 மணி வரை நடக்கும். இதற்கு ஒரு மணி நேரம் முன்னதாக 9 மணிக்கே தேர்வர்கள் வர வேண்டியது அவசியம். 10 மணிக்குப் பிறகு வரும் தேர்வர்களுக்கு அனுமதி இல்லை.

காலை, மாலை இரு வேளைகளிலும் தேர்வு எனும்போது பிற்பகல் 3 மணிக்கு மாலைத் தேர்வு தொடங்கும்.

அனைத்து வினாக்களுக்கும் விடையளிப்பது கட்டாயம்
இனி வரும் கொள்குறி வகைத் தேர்வுகளில் அனைத்து வினாக்களுக்கும் கட்டாயம் விடையளிக்க வேண்டும். எந்தக் கேள்விக்காவது விடை அளிக்கவில்லை என்றால், கூடுதலாக அளிக்கப்படும் E என்ற வட்டத்தைக் கருமையாக்க வேண்டும். எந்தெந்தக் கேள்விக்கு எந்தெந்த விடையை (A,B,C,D E) அளித்துள்ளார் என்பதையும் குறிப்பிட வேண்டும். இதற்குக் கூடுதலாக 15 நிமிடங்கள் அளிக்கப்படும்.

கை ரேகைப் பதிவு
தேர்வருடைய விடைத்தாளை அடையாளம் காண முடியாதபடி, விடையளிக்கும் பகுதியில் தேர்வரின் கையெழுத்துக்குப் பதிலாக இடது கை பெருவிரல் ரேகை பதிவு செய்யப்படும்.

விடைத்தாள் பாதுகாப்பு
விடைத்தாள்களைப் பாதுகாப்பான முறையில் தேர்வாணையத்துக்கு எடுத்து வர, அதி நவீன ஜிபிஎஸ் மற்றும் கண்காணிப்புக் கேமரா வசதியுடன் கூடிய பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்படும். இதை நேரலையாக தேர்வாணைய அலுவலகத்தில் கண்காணிக்க 24 மணி நேரக் கட்டுப்பாட்டு மையம் தொடங்கப்படும்.

தகவல்கள், கருத்துகளைத் தெரிவிக்க புதிய வசதி
தகவல் பரிமாற்றத்தை எளிதாக்க தேர்வாணைய இணையதளத்தில் சிறப்புத் தகவல் தளம் உருவாக்கப்படும். தேர்வாணையத்தின் ஆக்கபூர்வமான மாற்றங்கள் குறித்த பின்னூட்டங்களைத் தேர்வர்கள் பகிர்ந்து கொள்ளலாம். அவர்களின் ரகசியத் தன்மை பாதுகாக்கப்படும்''.

இவ்வாறு டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x