Published : 12 Feb 2020 10:19 AM
Last Updated : 12 Feb 2020 10:19 AM

ராமேசுவரம் மீனவர்கள் 11 பேர் நிபந்தனைகளுடன் விடுதலை: படகை இலங்கை அரசுடமையாக்கி உத்தரவு

இலங்கை கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்ட 11 ராமேசுவரம் மீனவர்கள்.

ராமேசுவரம்

இலங்கைக் கடற்படையால் சிறைபிடிக்கப்பட்ட ராமேசுவரம் மீனவர்கள் 11 பேரை நிபந்தனைகளுடன் விடுதலை செய்தும், மீனவர்களின் விசைப்படகை நாட்டுடைமையாக்கியும் ஊர்க்காவல் துறை நீதிமன்றம் உத்தரவிட்டது.

கடந்த ஜன.27-ல் ராமேசுவரத்தில் இருந்து சுவிட்டர் என்பவரது விசைப்படகில் கடலுக்குச் சென்ற சுவிட்டர், ரூம்ஸ், ராஜி, முத்து, இளையராஜா, செல்வம், விஸ்வா, வசீகரன், நாகரத்தினம், டேவிட், நாகேஸ்வரன் ஆகிய 11 பேரை நெடுந்தீவு அருகே இலங்கை கடற்படை சிறைபிடித்தது.

அவர்கள் மீது எல்லை தாண்டி இலங்கை கடல் பகுதியில் நுழைந்து மீன்பிடிக்கும் வெளிநாட்டு படகுகளுக்கு அபராதம் மற்றும் தண்டனை விதிக்கும் புதிய சட்டத்தின்கீழ் வழக்குப் பதிவு செய்து யாழ்ப்பாணம் சிறையில் அடைக்கப்பட்டனர்.

இந்நிலையில், ஊர்க்காவல்துறை நீதிமன்றத்தில் நேற்று நீதிபதி அந்தோனிப்பிள்ளை ஜூட்சன் முன்னிலையில் இவ்வழக்கு விசாரணைக்கு வந்தது. இதில் மீனவர்கள் மீண்டும் இலங்கை எல்லைக்குள் மீன்பிடித்தால் 2 ஆண்டுகள் சிறைத் தண்டனையை அனுபவிக்க வேண்டும் என்ற நிபந்தனையின் அடிப்படையில் 11 மீனவர்களை விடுதலை செய்து உத்தரவிட்டார். அவர்களின் விசைப்படகு அரசுடமையாக்கப்படுவதாக உத்தரவிட்டார். 11 பேரும் ஓரிரு நாளில் விமானம் மூலம் தாயகம் திரும்புவர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x